இயக்க ஆர்வலர்களே சிந்திப்பீர்! – K.M.H.

in 2009 பிப்ரவரி,ததஜ

இயக்க ஆர்வலர்களே சிந்திப்பீர்! – K.M.H.

முன்சென்ற இமாம்கள் தந்த பிக்ஹு சட்டங்கள் என்ற பெயரால் நான்கு மத்ஹபுகள் இருப்பதுபோல், சமீபகாலத்தில் இருந்த மவ்லவிகள், ஷேக்குகள் அமைத்துக் கொடுத்த நவீன பிக்ஹு சட்டங்களின்படி செயல்படுகிறவர்களே தங்களை அஹ்லஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, என்று அழைத்துக் கொள்பவர்கள்; அவர்கள் தங்களை குர்ஆன், ஹதீஃத் படி நடப்பவர்கள் என்று சொல்வதில் உண்மை இல்லை. அவர்களும் பிரிவினை வாதிகளே. பிரிவினைகள் இல்லாமல் இஸ்லாம் இல்லை. முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்றால், இந்த சமீபகால பிரிவினைகளை விட ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உண்டான மத்ஹபு பிரிவுகளே மேலானவை என்ற எண்ணத்தில் எமது 42 வது வயதுவரை ஷாஃபி மத்ஹபில் உறுதியாக இருந்து செயல்பட்டு வந்தோம் அஹ்லஹதீஸ், முஜாஹித், ஸலஃபி என்ற புதிய பிரிவுகளைக் கடுமையாகச் சாடி வந்தோம் என்பதை நம்மோடு அப்போது பழகிய தப்லீக் ஈடுபாடுடையவர்கள் நன்கு அறிவார்கள்.

எமது 21 வயதிலிருந்து 42 வயது வரை தப்லீக் மவ்லவிகள் அறிவுரைப்படி அல்குர்ஆனை தினசரி ஒரு பாகம் பொருள் அறியாமல் கிளிப்பிள்ளை பாடமாக ஓதி வந்தோம்; 21 வருட பொருள் அறியா ஓதுதல் எம்மிடம் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

எப்போது அல்லாஹ் எமக்கு அருள்புரிந்து அவனது இறுதி நேர்வழி காட்டல் நூல் அல்குர்ஆனை பொருள் அறிந்து படிக்க ஆரம்பித்தோமோ அப்போது தான் நாம் எவ்வளவு பெரிய வழிகேட்டில் இருக்கிறோம் என்பதை உணர ஆரம்பித்தோம். அல்குர்ஆன், பிரிந்து வழிகேட்டில் செல்லும் அனைத்துப் பிரிவினரையும் இவ்வுலகில் முஸ்லிம்களாகவே ஏற்று அவர்களையும் அரவணைத்து, பிரிவுகள் இல்லாத ஒன்றுபட்ட சமுதாயத்தை “முஸ்லிம்” என்ற நிலையில் கட்டிக்காக்கக் கட்டளையிடுகிறது. நாளை மறுமையில் நரகில் சென்று விழுந்து நரகை நிரப்பும் பெருங்கூட்டங்கள் பல பிரிவினர்களாகப் பிரிந்து வழிகேட்டில் சென்றாலும், அல்லாஹ்வின் கட்டளைப்படி,நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல்படி இவ்வுலகில் பிரிந்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் முஸ்லிம்களையும், அவர்களைப் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு இவ்வுலகில் அவர்களையும் முஸ்லிம்களாகவே ஏற்று, அவர்களையும் அரவணைத்த நிலையில் முஸ்லிம் உம்மத்தை ஒரே உம்மத்தாகவே கொள்ள வேண்டும் (21:92, 23:52) என்ற பேருண்மை நமக்குப் புலப்பட்டது. அல்லாஹ் எமது கண்களைத் திறந்து விட்டான்.

அதன் பின்னரே ஷாஃபி மத்ஹபை விட்டு தெளபா செய்து மீண்டு, மத்ஹபு பிரிவுகள், இயக்கப் பிரிவுகள் அனைத்தும் வழிகேடே. எந்த நிலையிலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. அல்லாஹ் சூட்டிய “முஸ்லிம்” என்ற பெயரில் மட்டுமே செயல்பட வேண்டும் (22:78). நபிமார்கள் செய்த அழைப்புப் பணியைச் செய்கிறவர்களும் தங்களுக்கென்று பிரிதொரு தனிப்பெயரைச் சூட்டிக் கொள்ளக்கூடாது; அவர்களும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டுமே சொல்ல வேண்டும் (41:33) போன்ற இறைக் கட்டளைகளை விளங்கிச் செயல்பட முற்பட்டோம்.

இந்த அடிப்படை நோக்கங்களுடன் நாம் எமது பிரசார பணியை 1983-ல் ஆரம்பித்தோம். அந்த அடிப்படையில் வெளியிட்ட பிரசுரங்களைப் பார்த்தே ஸ்.K. P.J. போன்ற சில மவ்லவிகள் எம்மைத் தொடர்பு கொண்டனர். குர்ஆன், ஹதீஸ் கூறும் இந்த அடிப்படைக் கொள்கைகளை ஏற்று எம்முடன் இணைந்து செயல்பட முன் வந்தனர். அந்த அடிப்படையிலேயே 1986 ஏப்ரலில் அந்நஜாத் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மவ்லவிகள் நம்மோடு இருந்த காலகட்டத்தில் அதாவது 1986 ஏப்ரலிலிருந்து 1987 ஜூன் வரை வெளிவந்த அந்நஜாத் இதழ்களைப் பார்ப்பவர்கள் “இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை”. “ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுயமாக குர்ஆன், `ஹதீஸை விளங்கி அதன்படி நடக்க வேண்டும்”. “நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை”. பொன்ற பேருண்மைகள் எழுதப்பட்டிருப்பதை அறிய முடியும். இது ஸ்.K. P.J. போன்ற மவ்லவிகள் எமது புரோகித மற்ற, ஆலிம்-அவாம் வேறுபாடற்ற சமத்துவ சகோதரத்துவ ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் உருவாக வேண்டும் என்ற எமது நோக்கத்தை ஏற்றுக் கொண்ட நிலையில்தான் எம்முடன் இணைந்து 15 மாதங்கள் செயல்பட்டனர் என்பதை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்களாகும்.

இந்த ஒன்றுபட்ட முயற்சியால் தமிழகமெங்கும் ஓர் அதிரடிப்புரட்சி ஏற்பட்டது. தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் நஜாத், நஜாத்காரன், நஜாத் கூட்டம் என மக்கள் பேச ஆரம்பித்தார்கள். மக்களிடம் ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டது. அதே நிலை நீடித்திருக்குமானால் இன்று தமிழகத்தில் மட்டுமல்ல. தமிழ் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் உள்ள பூர்வீகப் பள்ளிகள் ஏகன் இறைவனை மட்டும் நினைவு கூறும் அல்லாஹ்வின் பள்ளிகளாகி இருக்கும். ஹனஃபி பள்ளி, ஷாஃபி பள்ளி என்ற நிலை மாற்றப்பட்டிருக்கும். ஆனால் ஷைத்தான் விடுவானா?

எம்முடன் இணைந்த மவ்லவிகளின் உள்ளங்களில் பொறாமைத் தீயை வளர்த்து விட்டான். நீயா? நானா? என்ற ஈகோ – அகம்பாவத்தை வளர்த்து விட்டான். மவ்லவி அல்லாத ஒருவர் மவ்லவிகளாகிய நம்மை மிகைப்பதா? என்ற புலவர் காய்தலை உண்டாக்கினான். வெளிரங்கமான – அப்பட்டமான அவதூறுகளை, பொய்களைப் பரப்பி பிரிந்து நம்மை விட்டு வெளியேறினர். “இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை” என்று ஒப்புக் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்றியவர்கள். அவர்களது உறுதி மொழிக்கு மாறாக வாக்குறுதியை முறித்து (அல்பத்ஹ் 48:10) ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தைப் பிளவுபடுத்தி “ஜாக்” பிரிவு இயக்கத்தைத் தோற்றுவித்தனர். வழிகேட்டில் செல்லும்போது கூட்டம் சேர்வது இயல்புதானே. (பார்க்க 6:116) கூட்டம் கண்டு மயங்கினர்.

குர்ஆன், ஹதீஸ் ஒளியில் இதைவிட மிகப் பெரிய நம்பிக்கைத்துரோகமும், வாக்குறுதி மீறலும், ஒப்பந்த முறிப்பும், அமானித மோசடியும் கழுத்தறுப்பும் பிரிதொன்று இருக்க முடியுமா? என குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய்கிழிய பேசும் இயக்க ஆர்வலர்களே சொல்லுங்கள்.

பத்து வருடங்களில் அவர்களுக்குள்ளும் அதே ஈகோ-அகம்பாவம். அந்த அமைப்பும் பிளவுபட்டது. அதிலிருந்து த.மு.மு.க பின்னர் அங்கும் அதே ஈகோ – அகம்பாவம். ததஜ பிளவுபட்டு இப்போது இதஜ தோன்றியுள்ளது. அடுத்து தோன்ற இருப்பது உதஜ. இந்தப் பிளவுகளுக்கும் பிரிவுகளுக்கும் முடிவே வராது. இன்னும் பல பிளவு – பிரிவு ஜமாஅத்துகள் தோன்றும். இந்த அனைத்துப் பிளவுகளுக்கும் பிரிவுகளுக்கும் மூல கர்த்தா புரோகிதர் P.ஜைனுல் ஆபிதீன் என்பது உலகறிந்த உண்மை.

இயக்க ஆர்வலர்களே! இப்போது சிந்தியுங்கள். இயக்கங்களால் பட்டம், பதவி, பேர், புகழ், பணம், காசு, ஆள், அம்பு என உலகில் அனைத்தும் கிடைக்கும். நிச்சயமாக பிரிவு இயக்கங்களின் மூலம் அதாவது வழிகேட்டின் மூலம் இவை அனைத்தும் கிடைக்கும் என அல்லாஹ் வாக்களிக்கிறான்.

ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நாளை மறுமையில் நரகமே கூலி; அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான். (பார்க்க 11:15,16, 15:39, 17:18)

ஷிர்க் மட்டுமே அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பெரும் குற்றம். அது அல்லாத எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தாலும் அல்லாஹ் மன்னித்து சுவர்க்கம் அனுப்பி விடுவான் என ததஜ புரோகிதர்கள் தங்கள் ஆதரவாளர்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். முறை தவறி அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து உலக ஆதாயங்களையும், பேர், புகழ், சொகுசு வாழ்க்கை இவற்றை விரும்பி இயக்க மாயையில் மூழ்கும் இயக்க ஆர்வலர்கள் மேலே குறிப்பிட்டுள்ள குர்ஆன் எச்சரிக்கைகளைப் படித்து விளங்கி, மனதுள் வாங்கி உணர்வு பெற்று இயக்கங்களை விட்டு தெளபா செய்வார்களாக.

இயக்க மாயையில் மூழ்கும்போது அங்கு நானா? நீயா? போன்ற ஈகோ – அகம்பாவம் பதவிப் போட்டி பொறாமை, குழிபறிப்பு,அவதூறு பரப்புதல் என அனைத்து வகைக் குற்றச் செயல்களிலும் மனம் துணிந்து அறிந்த நிலையில் ஈடுபடும் அக்கிரமம் அரங்கேறும்.

குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று கூறும் இயக்க ஆர்வளர்களிடையே கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக்-ஜாக்-தமுமுக – ஐதஜ – ததஜ – இதஜ போன்ற இயக்கப் பிரிவுகள் தோன்றி இருப்பதே இந்தப் பிரிவு இயக்கங்கள் எந்த அளவு பாவமானவை – கொடூரமானவை, வழிகேட்டில் இழுத்துச் சென்று நரகில் சேர்ப்பவை என்பதை உணர்ந்து ஒவ்வொரு இயக்க ஆர்வலர்களான ஆணும், பெண்ணும் அந்த இயக்க மாயையிலிருந்து விடுபட முன் வருவார்களாக.

அதற்கு மாறாக இந்த இயக்க வெறியில் மூழ்கி தலைவர், செயலர், பொருளர், இளைஞர் அணி, தொண்டர் அணி, குண்டர் அணி என மனோ இச்சையின்படி செயல்படும் இயக்க ஆர்வலர்கள், மத்ஹபினரை விட கடுமையாக நாளை மறுமையில் தண்டிக்கப்படுவார்கள் என்பதை உணரவும்.

தர்காகாரர்களும், மத்ஹபினரும் தான் அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லும் ஷிர்க்-இணை வைக்கும் குற்றத்தைச் செய்கிறார்கள். நாங்கள் ஷிர்க் – இணை வைக்கவில்லை என் மனப்பால் குடிக்காதீர்கள். இயக்க ஆர்வலர்களாகிய நீங்களும் 7:3,9:31,33:21, 36,66,67,68, 42:21, 49:16 குர்ஆன் வசனங்களின்படி இறைக் கட்டளைகளை நிராகரித்து, தர்கா, தரரீக்கா, மத்ஹபு இவற்றைப் பின்பற்றுவோர் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகளின் கூற்றுக்களை இறைவாக்காக (?) நம்பி அவர்கள் பின்னால் செல்வதுபோல், இயக்க ஆர்வலர்கள் அஹ்லஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ புரோகித மவ்லவிகளை நம்பி, அவர்கள் பேச்சிலுள்ள சூன்யத்தில் மயங்கி அவர்கள் பின்னால் செல்கிறீர்கள். மற்றபடி நீங்கள் சுய புத்தியுடன் நம்பிக்கையுடன் மேலேயுள்ள 7:3, 9:31, 33:21,36,66,67,68, 42:21, 49:16 இறைவாக்குகளை நேரடியாகப்படித்து உணர்ந்து உள்வாங்கினால், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மதப் புரோகிதர்கள். அல்லாஹ் 9:9, 11:19, 31:6 போன்ற இறைவாக்குகளில் சொல்லிக் காட்டுவது போல் நேர்வழிவிட்டு கோணல் வழிகளில் மக்களை இட்டுச் செல்பவர்களே. முதல்லிது, தவ்ஹீது புரோகிதர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே; மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளி உலக ஆதாயம் அடைபவர்களே. சுயநலமிக்கவர்களே. அனைத்து இழி குணங்களையும் உடையவர்களே என்பதை நீங்களே சுயமாக அறிந்து கொள்ளமுடியும்.

மேற்கொண்டு விளக்கம் பெற வீடியோவை கிளிக் செய்யவும் வீடியோ – Video

Previous post:

Next post: