விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2009 பிப்ரவரி,ததஜ,பொதுவானவை

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே” என்ற தலைப்பில் எதுகை மோனையுடன் ஓர் ஆக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் 2005க்குப் பிறகு ததஜவினர் கட்டியுள்ள பள்ளிகள் மட்டும்தான் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கத் தகுதியுள்ள பள்ளிகள்; இதர பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,108 இறைவாக்குகள் கண்டித்துக் கூறும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என கடுமையாகக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது. இது குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் சரியா? இக்பால், அய்யம்பேட்டை.

விளக்கம் : ததஜவினர் தங்களின் இக்கூற்றை நியாயப்படுத்தி அவர்கள் வரிசைப்படுத்தியுள்ள நான்கு காரணங்கள் :

1. முஃமின்களுக்குத் தீங்கு இழைத்தல்

2. ஏக இறைவனை மறுத்தல்

3. முஃமின்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தல்

4. அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போர் புரிவோருக்குப் புகலிடம்

இந்த நான்கு தலைப்புகளிலும் விலாவாரியாக விரிவாக இன்று பெரும்பாலான பள்ளிகளில் இடம் பெற்றுவரும் குஃப்ரான், ஷிர்க்கான, பித்அத்தான காரியங்கள் அனைத்தையும் பட்டியலிட்டுள்ளனர். அல்லாஹ்வின் பள்ளிகளில் சடைபெற்று வரும் இப்படிப்பட்ட அனைத்துப் பாவகரமான செயல்பாடுகளையும் அகற்றிப் பூர்வீகப் பள்ளிகளைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் குர்ஆனையும், ஹதீஃதையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

ஆனால் ததஜவினர் எதை வலியுறுத்துகிறார்கள் என்றால், பூர்வீகப் பள்ளிகளில் ஷிர்க், குஃப்ர், பித்அத் காணப்படுவதாலும், அப்பூர்வீகப் பள்ளிகளை நிர்வகிப்பவர்களிடம் அனைத்து ஒழுக்கக் கேடுகளும், மார்க்க முரணான செயல்பாடுகளும் காணப்படுவதாலும், அல்குர்ஆன் அத்தவ்பா 9:107-ல் அல்லாஹ் குறிப்பிடும் மஸ்ஜிதன்ழிராரைப் போன்ற பள்ளிகளே அவை. எனவே அப்பூர்வீகப் பள்ளிகளில் உண்மையான முஃமின்கள் தொழுவது தகாது என்கிறார்கள் ததஜவினர்.

இவ்வாறு கூறிவிட்டு முஃமின்கள் தொழுவதற்குத் தகுதியான பள்ளிகள் எவை என்றால். ஹிஜ்ரி 1425க்குப் பிறகு ததஜவினர் கட்டிய தனிப்பள்ளிகளே என்று கூறி அதற்கு ஆதாரமாக.

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்கு தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108)

என்ற இறைவாக்கை எடுத்து எழுதியுள்ளனர். ததஜவினர் என்ன சொல்கிறார் என்று புரிகிறதா? கடந்த 1430 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் 9:107-ல் அல்லாஹ் குறிப்பிடும் முஃமின்கள் தொழத் தகுதியற்ற பள்ளிகள். 1425 ஆண்டுகளுக்குப் பின்னர் ததஜவினராகிய நாங்கள் கட்டியிருக்கும் தனிப்பள்ளிகள் மட்டுமே முஃமின்கள் அல்லாஹ்வை வணங்குவதற்குத் தகுதியுள்ள பள்ளிகள் என்று கொஞ்சமும் நாக்கூசாமல், கை கூசாமல் ஆணவத்துடன் எழுதியுள்னர்.

இன்றைய சூழ்நிலையில் மஜ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா போன்ற பூர்வீகப் பள்ளிகளிலும் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட பல ஷிர்க், பித்அத்கள் நடக்கத்தான் செய்கின்றன. தவாஃபில், ஸயீயில், மினாவில், அரஃபாவில், முஜ்தலிபாவில் அல்லாஹ்வை அழைப்பதற்குப் பதிலாக அல்லாஹ் அல்லாதவர்களை அதுவும் இறந்து குளிப்பாட்டி இறந்தவர்களுக்காக நடத்தப்படும் தொழுகை நடத்தி, மண்ணில் புதைக்கப்பட்டவர்களை எல்லாம் அழைத்துப் பிரார்த்திக்கும் கொடூரமான ஷிர்க்கான செயல்கள் நடைபெற்று வருவதை 1981-லும், 2006 ஜனவரி, 2006 டிசம்பரிலும் எமது கண்ணால் கண்டோம். காதால் கேட்டோம்.

இறந்து போன அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அப்துல்காதிர் நாகூரி(ரஹ்), காஜா முயீனுத்தீன் அஜ்மீரி(ரஹ்) போன்றவர்களை அழைத்துப் பிரார்த்திற்கும் நிலையும் இருக்கத்தான் செய்கிறது. ததஜவினரின் இந்த நவீன விளக்கப்படி மக்கா, மதீனா, ஜெருசலம் பள்ளிகளும் 9:107ல் அல்லாஹ் குறிப்பிடும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என்பதுதான் ததஜவினரின் புதிய கண்டுபிடிப்பு.

ததஜவினர் தங்களின் சொந்த யூகத்தையும், கற்பனையையும் ஆதாரமாகத் தந்திருக்கிறார்களே அல்லாமல், குர்ஆனிலிருந்தோ, ஹதீஸிலிருந்தோ நேரடியான ஒரேயொரு ஆதாரத்தையும் தரவில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று அல்குர்ஆன் உறுதியாக அறிவிக்கிறது. (பார்க்க 3:31, 33:21) நபி(ஸல்) இதற்கு எவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

நபி(ஸல்) அவர்கள், அவர்களது 40வது வயதில் அல்லாஹ்வால் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அல்லாஹ்வுடைய வீடான மஸ்ஜிதுல் ஹரம் எந்த நிலையிலிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே!

அதனுள் 360 சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கஃபா வளாகத்தினுள்ளேயே பல சமாதிகள்(தர்கா) இருந்தன. ஆண்களும், பெண்களும், நிர்வாணமாக தவஃபு செய்தனர். கை தட்டுவதும், சீட்டி அடிப்பதும்தான் அவர்களுடைய வணக்கமாக இருந்தது. சுருக்கமாக சொன்னால், இந்த ததஜவினர் இன்றைய பூர்வீக மஸ்ஜிதுகளைப் பற்றி எப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை வைக்கின்றனரே அதைவிடழ பல மடங்கு மோசமான நிலையில்தான் மஸ்ஜிதுல் ஹரம் அன்று இருந்தது. நபி(ஸல்) அங்கு சென்று அல்லாஹ்வை வழிபடுவதைத் தடுத்தனர். கடுமையான துன்பங்களைக் கொடுத்தனர் அதனது அப்போதைய நிர்வாகிகளான குறைஷ் காஃபிர்கள். அன்று நபி(ஸல்) அவர்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால், இன்றைய பூர்வீகப் பள்ளிகளின் நிர்வாகிகள் இவர்களுக்குக் கொடுக்கும் துன்பங்கள் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

இப்படிப்பட்ட கொடூர நிலையிலும் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே!” என்ற முழக்கத்துடன் நபி(ஸல்) தனிப்பள்ளி கட்டி வழிகாட்டவில்லை. சிலைகளும், சமாதிகளும் இருந்த அப்பள்ளிக்கே சென்று தனியோனைத் துதித்தார்கள். மதீனா சென்ற பின்னரும் முஸ்லிம்கள் தனியோனைத் துதித்திட அப்பள்ளியை நோக்கித் தொழும்படியே அத்தனியோன் அல்லாஹ் நபிக்குக் கட்டளையிட்டுள்ளான். நபி(ஸல்) அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து நடந்ததால், சில காலத்தில் அப்பள்ளியான மஸ்ஜிதுல் ஹரமை நபி(ஸல்) அவர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர உதவி செய்தான். அங்கிருந்த சிலைகளும், சமாதிகளும் உடைத்தெறியப்பட்டு, தனியோனைத் துதித்திட தூய்மையானதாக அல்லாஹ் அதை ஆக்கித்தந்தான்.

மேலும் அன்று நபி(ஸல்) அவர்கள் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்தார்களே அல்லாமல் இம்மி அளவும் மாறு செய்யவில்லை. ஆனால் ததஜவினரோ சமுதாயத்தைப் பிளவுபடுத்தித் தனிப்பள்ளி கட்டவேண்டும் என்ற கொடூரமான ஆர்வத்தால் தொப்பியுடன் பள்ளியினுள் சென்று தொழும்போது தொப்பியைக் களற்றி கீழே போட்டு விட்டுத் தொழுவது. ஆம்ம்ம்மீமீமீன் என மிக அதிகமான தொனியில் கத்துவது, இருப்பில் விரலை நீரிலிருந்து வெளியே எடுத்துப்போட்ட மீன் துடிப்பது போல் மிக வேகமாக ஆட்டுவது, இமாம் சலாம் கொடுத்தாரோ இல்லையோ தொழுகை வரிசைகளை முறித்துக் கொண்டு கூட்டிலிருந்து பறவை வெளியே பறப்பது போல் வேகமாக வெளியேறுவது. இப்படி மற்றவர்களை கோபப்படவைத்து குழப்பத்தை விளைவித்து பள்ளியிலேயே அடிபிடி தகராறு என கலகம் விளைவித்து. இப்பள்ளிகளில் நம்மால் தொழ முடியாது என தம் பக்தர்கள் தூண்டிவிட்டே தனிப்பள்ளி கட்ட வைத்தார்கள். அவர்களது குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்பாடுகளே கலகத்தை விளைவித்தது.

வீம்பாக தொப்பியில்லாமல் தொழுவது, ஆம்ம்ம்மீமீமீன் என நீட்டி முழக்கி சத்தமாகக் கத்துவது, இருப்பில் வேகமாக விரலை ஆட்டுவது, இமாம் சலாம் கொடுத்தாரோ இல்லையோ பள்ளியைவிட்டுப் பறப்பது இவை அனைத்தும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல்களாகும்.

இவற்றிற்கு ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸ்கள், நெஞ்சில் கைகட்டுவது பற்றிய ஹதீஸ்கள், நெஞ்சில் கைகட்டுவது பற்றிய ஹதீஸ் உட்பட கடமையான ஜகாத் விஷயத்தில் ததஜவினர் தள்ளுபடி செய்யும் ஹதீஸ்களைவிட இவை தரம் தாழ்ந்தவையாகும். இவற்றை விட ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் இருக்க தரம் குறைந்த மேற்படி ஹதீஸ்களை ததஜவினர் தூக்கிப் பிடிக்க ஒரே காரணம். ஒன்றுபட்டிருக்கும் ஜமாஅத்தில் பிளவை ஏற்படுத்தி தனிப்பள்ளி கட்ட வேண்டும் என்ற தனியாத ஆர்வமே. விரலாட்டும் ஹதீஸில் இடம் பெறும் ஆஸிம் பின் குலைபை தூக்கி நிறுத்தும் ததஜவினர், “ரஃபயல்யதைன்” என்ற கைகளை உயர்த்தக் கூடாது என்று வரும் ஹதீஸில் அதே ஆஸிம் பின் குலைபை நிராகரிப்பதே இதற்குப் போதிய சான்றாகும். அதிகமாக இருக்கும் ஹனஃபிகள் விரலாட்டமாட்டார்கள். கைகளை உயர்த்தமாட்டார்கள். அவர்களுக்கு முரணாக செயல்பட்டு கலகத்தை உண்டாக்கி தனிப்பள்ளி கட்டவேண்டும் என்ற குறிக்கோளைத் தவிர இதற்கு வேறு நோக்கமில்லை. அவர்கள் பின்னால் தொழுதால் அத்தொழுகை கூடாது என்ற குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட சட்டத்தை வலுவாகப் பிடித்துக் தொங்குவதும் அந்த கெட்ட நோக்கத்துடனேயே.

தங்களின் ததஜவையும், அதன் கேடுகெட்ட கொள்கைகளையும் நிலைநிறுத்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களை பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸ்களை ஆராரபூர்வமானது என்றும், ஒரு சந்தர்ப்பத்தில் ஆதாரபூர்வமானது என்று சொன்னதை பின்னர் பலவீனமானது என்றும், முன்னர் பலவீனமானது என்று சொன்னதை பின்னர் ஆதாரபுர்வமானது என்றும் ததஜ புரோகிதர் தனது வார்த்தை ஜாலம், சூன்யப் பேச்சு மூலம் நிலைநிறுத்த முற்படுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தனி அமைப்பு, தனி நிர்வாகம், தனிப்பள்ளி என முஸ்லிம்களை வழிகெடுக்கவே.

ததஜ புரோகிதர் அன்று 1986-ல் எமக்களித்த வாக்குறுதியில் நிலைத்து நின்று, “இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை; ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுயமாக குர்ஆன், ஹதீஸை விளங்கிச் செயல்பட வேண்டும். புரோகிதர்களை நாங்கள் சப்ளை செய்வதில்லை என்ற வாக்குறுதியில் உறுதியாக நின்று இன்றுவரை செயல்பட்டிருந்தால். மஸ்ஜிதுல் ஹரம் ஷிர்க், குஃப்ர், பித்அத் போன்றவற்றிலிருந்து அன்று தூய்மையானது போல் இன்று பெரும்பாலான பள்ளிகள் தூய்மையடைந்திருக்கும். 1986-லே சில பள்ளிகள் அப்படி தூய்மையான நிலைக்கு வந்ததை மறுப்பாரா ததஜ புரோகிதர்? 48:10, அல்லாஹ்வின் நேரடியான கட்டளையை நிராகரித்து, புறக்கணித்து தனது வாக்குறுதியை முறித்து ஒன்றுபட்ட ஜமாஅத்தைப் பிளவுபடுத்தியதால் இன்று பல பிரிவுகளாகிவிட்டன. ததஜ புரோகிதர் தான் முதலில் “ஆக்” என்றும் பின்னர் “ஜாக்” என்றும் பின்னர் ஐதஜ என்றும் பின்னர் ததஜ என்று பல பிரிவுகளை உண்டாக்கினார். இப்போது புதிதாக அவரது நயவஞ்சகச் செயலால் இதஜ உருவாகியுள்ளது. வெகு விரைவில் ததஜ புரோகிதரின் சதியால் உதஜ உருவாகும் என்று முஸ்லிம்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த அனைத்துப் பிரிவுகளின் சூத்திரதாரி ததஜ புரோகிதர்தான் என்பதை மறுக்க முடியுமா? மத்ஹபு பிரிவுகளை தங்கமாக்கிவிட்டார் ததஜ புரோகிதர். நாங்கள் ஆயிரம் வருடங்களாக நான்கு மத்ஹபுகளுக்குள் கட்டுப்பட்டு நடக்கிறோம். நீங்கள் இருபது வருடங்களிலேயே இத்தனைப் பிரிவுகளிலாகி முஸ்லிம் சமுதாயத்தைச் சீரழித்து, மாற்றார்களும் முஸ்லிம் சமுதாயத்தை தங்கள் வார, மாத இதழ்களில் கொச்சைப்படுத்தி எழுதக் காரணமாகிவிட்டீர்களே! என்று குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று மார்தட்டும் மக்களின் முகங்களில் காரித்துப்பும் நிலைக்கு ஆளாக்கியது இந்த ததஜ புரோகிதர்தானே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

ததஜ புரோகிதரே 9:31, 42:21, 49:16 இறைக் கட்டளைகளுக்கு முரணாக ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருந்துகொண்டு, 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறைக் கட்டளைகளுக்கு முரணாக பிரிவில் இருந்துகொண்டு, மற்ற முஸ்லிம்களை ஷிர்க், குஃப்ர், பித்அத் மற்றும் பிரிவுகளில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்ட என்ன அருகதை அவருக்கு இருக்கிறது? அல்லாஹ்வின் பார்வையில் அவர்களைவிட இவர்தான் கேடுகெட்ட நிலையில் இருக்கிறார் என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துவதை இவராலோ, இவரது பக்தர்களாலோ மறுக்க முடியுமா?

தர்கா, மர்ஹபுகளில் சிக்கி வழிகேட்டில் இருப்பர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் தரகர்களாக இறந்தவர்களையும், புரோகிதர்களையும் கொண்டிருக்கிறார்கள் என்றால், ததஜ புரோகிதரோ அல்லாஹ்வுக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையில் தன்னையே இடைத்தரகராக ஆக்கி இருப்பதோடு, 42:21, 49:16 இறைவாக்குகள் சொல்வதுபோல், தன்னை அல்லாஹ்வுக்கு இணையாளராகவும், அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் ஆணவக்கார அபூ ஜஹீலாகவும் மாறியுள்ளார் என்பதை மறுக்க முடியுமா? தான் அபூ ஜஹீலைவிட கொடியவன் என ததஜ புரோகிதர் தன்னைப் பற்றித் தானே கூறிக் கொண்டதும். 20 வருட நீண்ட கால அவரது நெருங்கிய நண்பர் அன்வர் பாஷா அவரை கிரிமினல்களுக்கெல்லாம் பெரிய கிரிமினல் என்று அறிமுகப்படுத்தியதும் இங்கு நினைவு கூறத்தக்கது. அதாவது தர்கா, மத்ஹபு புரோகிதர்களைவிட ததஜ புரோகிதர் மிகவும் கேடுகெட்ட நிலையில் இருக்கிறார் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

1987க்கு முன் இந்தியாவில் ஹனஃபி பள்ளி, ஷாஃபி பள்ளி, முஜாஹித் பள்ளி, அஹ்லஹதீஸ் பள்ளி என அல்லாஹ்வின் பள்ளிகள் அடையாளம் காட்டப்பட்டன. ததஜ புரோகிதரின் கைங்கரியத்தால் இன்று அந்த நான்கு வகைப் பள்ளிகளுடன் மேலதிகமாக ஜாக் பள்ளி, ததஜ பள்ளி என்பதுடன் இதஜ பள்ளியும் உதயமாக இருக்கிறது. சிறிது காலத்தில் உதஜ பள்ளியும் உதயமாகிவிடும். முன்னைய நான்கு வகை பிரிவு பள்ளிகளுக்கும் வெவ்வேறு நான்கு சூத்திரதாரிகள். ஆனால் பின்னைய நான்கு வகை பிரிவு பள்ளிகளுக்கும் ஒரே நபரான ததஜ புரோகிதரே சூத்திரதாரியாக இருக்கிறார். வழிகேடுகளில் மிகப் பெரிய வழிகேட்டைக் கற்பனை செய்து உருவாக்கியவர் ததஜ புரோகிதர் என்பதை அறிவுள்ளவர்கள் மறுக்க முடியுமா?

ஹனஃபி, ஷாபி, மாலிக்கி, ஹன்பலி மத்ஹபுகளைச் சேர்ந்தவர்கள் மற்ற மத்ஹபு பள்ளிகளில் போய் உரையாற்ற எவ்விதத் தடையும் இல்லை. தாராளமாக அனுமதிப்பார்கள். ததஜ பள்ளிகளில் மத்ஹபினரை விட்டு விடுவோம். அவரும் சேர்ந்து உருவாக்கிய ஜாக் புரோகிதர்கள் வந்து உரையாற்ற அனுமதிப்பாரா? முஜாஹித், அஹ்லஹதீஸ், ஸலஃபி புரோகிதர்கள் வந்து உரையாற்ற அனுமதிப்பாரா? அனுமதிக்கமாட்டார். அதுதான் போகட்டும்; மத்ஹபுகளிலோ, இயக்கப் பிரிவுகளிலோ இல்லாமல் “முஸ்லிம்” என்ற நிலையில் எவ்வித சுய விளக்கமும் இல்லாமல் குர்ஆன், ஹதீஸ் கொண்டு மட்டும் உரையாற்றுகிறவர்களையாவது ததஜ புரோகிதர் தனது ததஜ பள்ளியில் உரையாற்ற அனுமதிப்பாரா? நிச்சயம் அனுமதிக்க மாட்டார்.

நான்கு மத்ஹபினரைவிட கேடுகெட்ட நிலையில் ததஜ புரோகிதர் இருக்கிறார் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா? எங்களின் ததஜ பள்ளியில் எங்களின் ததஜ கொள்கையை ஏற்றவர்கள் மட்டுமே உரையாற்ற முடியும்; ததஜவில் இருக்கும் புரோகிதர்கள் ததஜ அல்லாத மேடையில் ஏறி உரையாற்ற மாட்டார்கள் என்று அவர் பெருமையுடன் பீற்றிக் கொள்வதே ததஜ புரோகிதர் மத்ஹபு பிரிவினர்களைவிட கேடுகெட்ட ஒரு புதிய பிரிவை பிளவை உண்டாக்கியிருக்கிறார் என்பதற்கு மேலும் ஒரு ஆதாரமாக இருக்கிறது என்பதையும் ததஜ புரோகிதராலும் அவரது பக்தர்களாலும் மறுக்க முடியுமா?

இப்போது சொல்லுங்கள்

தீங்கிழைப்பதற்காகவும் (ஏக இறைவனை அவனது பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பதன் மூலம்) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிளவை ஏற்படுத்திவிடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராக (பல குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் மறுப்பதன் மூலம்) போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளி வாசலை ஏற்படுத்திக் கொண்டோர்” நாங்கள் நல்லதைரத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே) அதில் நீர் ஒருபோதும் வணங்காதீர். (அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,109)

இந்த இறைவாக்குகள் ததஜ புரோகிதருக்கும், அவரது பக்தர்களுக்கும் முழுக்க முழுக்க பொருந்துகிறதை அவரால் மறுக்க முடியுமா?

இன்றைய காலகட்டத்தில் ததஜ புரோகிதரை விட அல்குர்ஆனின் பல நேரடிக் கட்டளை மறுப்பவர்களை, அப்பட்டமாகப் பொய்களை கூறுபவர்களை, அப்பட்டமான அவதூறுகளைப் பரப்புகிறவர்களை, அதுவும் ஒருவரை மக்களிடமிருந்து ஒதுக்கிவிட முகவரி இல்லாதவராக ஆக்கிட அவர்மீது துணிந்து பெண்களைப் பற்றிய அவதூறுகளையும், பொருளாதாரக் குற்றச்சாட்டுக்களையும் சுமத்துங்கள் என்று தனது பக்தர்களுக்கு அப்பட்டமான அறிவுரை கூறி அவ்வாறு அவதூறு பரப்பச் செய்கிறவர்களை காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. இவை அனைத்திலும் கொடிகட்டிப் பரப்பவரே ததஜ புரோகிதர். அல்லாஹ் அன்னிஸா 4:112-ல் கூறி இருப்பதுபோல் பல குற்றங்களைச் செய்துவிட்டு அக்குற்றங்களை மற்றவர்கள் மீது எளிதாகச் சுமத்தி அவற்றை தனது கண்மூடி பக்தர்கள் மூலம் உலகம் முழுவதும் பரப்பத் துணிந்தவர் ததஜ புரோகிதர். சுருக்கமாகச் சொன்னால் அன்று நபி(ஸல்) அவர்களது காலத்தில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூல் என்ற நயவஞ்சன் செய்த அனைத்து வஞ்சகச் செயல்களையும் துணிந்து செய்துவிட்டு, தான் நல்லதையே செய்வதாகப் பொய் கூறுபவரே ததஜ புரோகிதர். அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலை விட ஒருபடி மேலே போய், பாக்கரைப் பற்றி நூற்றுக்கும் மேலாக இருந்த ஒரு பெருங்கூட்டத்தில் தான் சொன்ன அவதூறுகளை, தான் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்மீது ஆணையிட்டு சத்தியம் செய்து, கடலூர் ஜமாஅத்தினருடன் குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக “முபாஹலா” செய்த பெரும்பாவி ததஜ புரோகிதர். அவரது துரோகச் செயல்களால்தான் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று கூறி மத்ஹபுகளை விட்டு விலகி வந்தவர்கள். இன்று பல இயக்கப் பிரிவினர்களாகி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுகின்றனர். சுன்னத்துவல் ஜமாஅத்தினர் இவர்கள் முகங்களிலேயே காரித்துப்ப இந்த ததஜ புரோகிதரே முழுமுதல் காரணம் என்பதை அறிவுள்ள மக்கள். சுயசிந்தனையுள்ள மக்கள் தெளிவாகப் புரிந்து வருகிறார்கள்.

அமானிதம், வாக்குறுதி, ஒப்பந்தம் என்று மக்களுக்கு பூச்சாண்டி காட்டும் ததஜ புரோகதர் அவற்றைத் தானும் உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதை வசதியாக மறந்துவிடுவார். “மற்றவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு உங்களை நீங்கள் மறந்து விடுகிறீர்களா?” என்ற (2:44) இறைவாக்கை துணிந்து நிராகரிப்பவர் ததஜ புரோகிதர்.

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலே நீர் வணங்குவதற்குக் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் அத்தவ்பா 9:108)

இந்த இறைவாக்கை எடுத்து எழுதி தங்களின் ததஜ பள்ளி மட்டுமே தொழுவதற்கு தகுதியான பள்ளி எனவும் தாங்கள்தான் தூய்மையானவர்கள் எனவும் நிலைநாட்ட முற்பட்டுள்ளனர். எந்த அளவு அறிவு சூன்யமும், ஆணவமும் (அறிவு சூனியனுக்கே ஆணவமும் தற்புகழ்ச்சியும் ஏற்படும்) இருந்தால் ஹி.1425 ஈ.2005க்குப் பிறகு இவர்கள் கட்டிய பள்ளிகளை ஆரம்ப நாள் முதல் உள்ள பள்ளிக்கு ஒப்பிட்டுச் சொல்லும் அசட்டுத் துணிச்சல் ஏற்பட்டிருக்கும். இன்று உலகமெங்கும் காணப்படும் பள்ளிகளை விட இவரது ததஜ பள்ளிகள் முன்னிலை பெற்றுவிட்டனவா? தூய்மை பெற்றுவிட்டனவா? இவரது ததஜ பள்ளி நிர்வாகிகளின் சதிச் செயல்களும், ஆணவமும், ஒழுக்கக்கேடுகளும், பொருளாதார மோசடிகளும் மக்களுக்குத் தெரியாது என்ற அசட்டுத் துணிச்சலில் இவ்வாறு பிதற்றுகிறாரா?

உண்மையைச் சொன்னால், அன்றைய நயவஞ்சகர்கள் ஒன்றுபட்டிருந்த சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் தீய நோக்கத்துடன் புதிய பள்ளியைக் கட்டிக்கொண்டு நாங்கள் நல்லதைத்தான் செய்கிறோம் என்று பொய் உரைத்தார்களோ அதேபோல், இந்த நயவஞ்கர்கள் ஒன்றுபட்டிருந்த ஜமாஅத்தைப் பிளவுபடுத்தவே ஜாக் என்றும் பின்னர் ததஜ என்றும் தனிப்போட்டிப் பள்ளிகளைக் கட்டிக் கொண்டு நாங்கள் நல்லதையே நாடுகிறோம். ஏகத்துவத்தை நிலைநாட்டுபவராகவும் நல்லதை நாடுபவராகவும் இருந்தால் அன்நிஸா 4:49, அந்நஜ்ம் 53:32 இறைக் கட்டளைகளுக்கு முரணாக, அவற்றை நிராகரித்துவிட்டு தன்னை ஏகத்துவவாதி-தவ்ஹீத்வாதி, தான்தான் பரிசுத்தவான். தனது ஜமாஅத்துத்தான் தவ்ஹீத் ஜமாஅத் என ஒருபோதும் பீற்றிக் கொள்ளும் ததஜ புரோகிதர் பொய்யராகவும், ஆணவக்காரராகவும், அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை மனமுரணாக நிராகரித்துப் பொய்யுரைப்பராகவும் மட்டுமே இருக்க முடியும்.

1988லிருந்து 1995 வரை இவரே முன் நின்று கட்டிய ஜாக் பள்ளிகள் இன்று ததஜ புரோகிதரின் பார்வையில் 9:107 கூறும் தொழ தகுதியற்ற பள்ளிகளாகிவிட்டன. அந்த ஜாக் பள்ளிகளுக்குப் பக்கத்திலேயே இப்போது போட்டி ததஜ பள்ளிகள் உருவாகி வருகின்றன. இந்தக் கூத்தாடியின், நடிகனின், பச்சோந்தியின் வசீகர, சூன்ய, நயவஞ்சகப் பேச்சை வேத(?) வாக்காக நம்பி அவர் பின்னால் செல்லும் பக்தகோடிகள் உண்மையிலே பரிதாபத்திற்குரியவர்கள். அவர்கள் 33:36,66,67,68 கடுமையான இறை எச்சரிக்கைகளை நேரடியாகப் படித்து விளங்கி திருந்தி தவ்பா செய்தால் தப்பினார்கள். இல்லை என்றால் அந்த இறைவாக்குகள் கூறும் இடத்திறகே போய்ச் சேர்வார்கள் என எச்சரிக்கிறோம்.

ததஜ புரோகிதர் உலகிலுள்ள பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் 9:107 சொல்லும் தொழுவதற்குத் தகுதியற்ற பள்ளிகள், தான் 2005க்குப் பிறகு ஜமாஅத்தைப் பிறவுபடுத்தி கட்டிவரும் ததஜ தனிப்பிரிவு போட்டிப் பள்ளிகளே தொழுவதற்குத் தகுதியான பள்ளிகள் என்று ஆணவத்துடன் தனது ஏகத்துவ இதழில் பிதற்றி இருப்பதால் இந்த அளவு கடுமையாக விமர்சிக்க நேரிட்டது. அவரது கண்மூடி பக்தர்கள் பொறுத்துக் கொள்வார்களாக.

ஆயினும் நாம் வரம்புமீறி எதையும் எழுதவில்லை. அவரைப்போல் அவதூறுகளையோ, பொய்யான செய்திகளையோ எழுதவில்லை. நல்ல நோக்கத்துடன் பொய் சொல்லலாம். தந்திரங்கள் செய்யலாம். அவதூறு பரப்பலாம். அல்லாஹ்மீது ஆணையிட்டுப் பொய் சத்தியம் செய்யலாம். முபாஹலா செய்யலாம் என்பதெல்லாம் ததஜ புரோகிதரின் கொள்கையாகும். அவரது குர்ஆன் மொழிபெயர்ப்பு, மற்றும் விரிவுரை நூலில் விரிவுரை எண் 162(6:76௭8,83) 236(12:76) 336(37:89) இவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள் நாம் கூறுவது உண்மை என்பதை அறிய முடியும். நாம் ஒருபோதும் அப்படி நடக்கமாட்டோம். மேலும் உண்மை அறியும் ஒரு குழுவினர் பெரும் முயற்சி செய்து ததஜ புரோகிதரையும், எம்மையும் ஒரே மேடையில் ஏற்றினால் நாம் எழுதியுள்ளவற்றிற்குரிய ஆதாரங்களை எடுத்துக்காட்டி சாட்சிகளைச் சொல்லவைத்து அவை அனைத்தும் உண்மைதான் என நிலைநாட்ட என்றும் தயாராகவே இருக்கிறோம் என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கிறோம். 1987லிலிருந்து நாம் ததஜ புரோகிதரை அழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்தான் பிடரியில் பின்னங்கால் அடிபட ஓடிக்கொண்டிருக்கிறார்.

Previous post:

Next post: