மரணம் வரமா அல்லது சாபமா?
அய்யம்பேட்டை A. நஜ்முதீன்
உலகில் அன்றாடம் புதிது புதிதாக பல நவீன கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் இப்போது AI, AIG, AIS வரை வந்துவிட்டன.
AI என்றால்; Artificial Intelligence மனித மூளையைப் போன்று செயல்பட வைக்கும் செயற்கை நுண்ணறிவு கணினி.
உதாரணம் : Google Translate & Chat GPT.
AIG என்றால் Artificial Intelligence General.
பொது செயற்கை நுண்ணறிவு கணினி,
உதாரணம் : ரோபோ
மனிதன் செய்யக்கூடிய சில வேளைகளை செய்யக்கூடிய பல துறைகளிலும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கணினி.
A I S என்றால் = Artificial Intelligence Super / Special / Strong.
ஒரு குறிப்பிட்ட வேலையை மட்டும் மிகச் சிறப்பாக செய்யக்கூடிய நுண்ணறிவு கணினி.
(இன்னும் முழுமைப் பெறவில்லை)
உதாரணம் : Chess Playing Computer
சதுரங்க விளையாட்டு கணினி.
இவைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்ட நோக்கம் :
1. வார விடுமுறை கேட்காது.
2. Union (தொழிற்சங்கம்) ஏற்படுத்தாது.
3. ESI, PF, Bonus எதுவும் இல்லை.
4. கோரிக்கை, ஆர்ப்பாட்டம், சாலை மறியல் எதுவும் செய்யாது.
என்பதற்காகவா? என்றால் இல்லை. (அல்லது) எந்த பிரச்சனையும் செய்யாமல் வேலைகள் மட்டும் நடக்க வேண்டும் என்பதற்காகவா? என்றால் ஆம்!. ஆனாலும், வேறு சில மிக முக்கியமான ஒரு இலக்கை நோக்கி விஞ்ஞானிகளில் சிலர் முயற்சி செய்கிறார்கள்.
அது என்னவென்றால்;
1. மனிதனிடமுள்ள ஏக கடவுள் நம்பிக்கையை தகர்க்க வேண்டும்..
2. ஏக கடவுளின் மீதுள்ள நம்பிக்கை வளரவிடக் கூடாது.
3. கடவுளை எப்படியாவது வென்றுவிட வேண்டும்.
4. கடவுள் இல்லை எல்லாமே இயற்கை என்று நம்பவைக்க வேண்டும்.
5. மிக முக்கியமானது, மரணத்தை வென்றாக வேண்டும்.
நாம் மேலே குறிப்பிட்ட முதல் நான்கில் பெரும்பாலானோரை விஞ்ஞானிகளில் வெற்றிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் கடைசியாக எடுத்த ஆயுதம். “ஆசை” ஆகும்.
இந்த ஆசை படித்தவர்களுக்கும் வருகிறது, பாமர மக்களுக்கும் வருகிறது.
ஏன் என்றால் மரணம் ஒரு சாபம், அது வரம் அல்ல என பலர் நினைக்கின்றார்கள்.
எனவேதான் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு மரணம் வராமல் இருக்க ஆசைப்படுகிறார்கள். அதுவே மருந்து, மாத்திரைகள் ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், எல்லோரும் சொல்லும் பதில் என்ன தெரியுமா?
மருந்து, மாத்திரைகள் நோயை கட்டுப்படுத்தும் என்பதாகவே இருக்கிறது. (இது ஓரளவு உண்மைதான்) ஆனால் யாருமே மரணம் வராமல் இருக்கும் என்று சொல்வதில்லை, நம்புவதும் இல்லை. ஆனாலும், பேராசை “மரணத்தை வெல்ல வேண்டும்.’ சரி இவர்கள் ஆசைப்படுவது போல் மரணம் நிகழாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? என்றால் அதுவுமில்லை.
ஏன் என்றால் பெரும்பாலோருக்கு தெரியும், “நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதியான கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே…” (அ.கு. 4:78)
அதாவது ஆஞ்சோகிராம் செய்தாலும் சரி, இதய அறுவை சிகிச்சை செய்தாலும் சரி மருந்து மாத்திரைகள் மட்டுமே குறையும், ஆயுசு (வயது) கூடாது. அதையும் இறைவனே சொல்லியுள்ளான். “அல்லாஹ் உங்களைத் தொடக்கத்தில் மண்ணிலிருந்தும் பின்னர் விந்துத் துளியிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களை இணை களாக்கினான். அவன் அறியாமல் எந்த பெண்ணும் கருவுறுவதோ, பிரசவிப்பதோ இல்லை. வாழ்நாளின் வயது என்னவென்பது பதிவேட்டில் (Master Record-ல்) உள்ளது. இது அல்லாஹ்வுக்கு எளிதானதே!’ (அ.கு.35:11)
பின்பு ஏன் மரணத்தை கண்டு பயப்படுகிறீர்கள். நீங்கள் பயப்படக்கூடிய அந்த உங்கள் மரணத்திற்குப் பிறகு இவ்வுலகில் என்ன நடக்கும் தெரியுமா?
1. அதிகபட்சமாக நீங்கள் ஆசையாக பார்த்து, பார்த்து கட்டிய உங்கள் வீடுகளில் சுமார் 48 மணி நேரத்திற்கு மேல் வைத்திருக்க மாட்டார்கள்.
2. உங்களை நல்லடக்கம் செய்த பின் ஒருசில மணி நேரங்களில் அழுகுரல் முழுமையாக அடங்கியிருக்கும்.
3. தாமதமாக செய்தி தெரிந்ததால் நேரில் வர இயலவில்லை. யாரேனும் உறவினர் சிலர் உங்கள் மகன்/மகளிடம் அலைபேசியில் பேசுவார்கள்.
4. நீங்கள் இறந்த அன்றே சமைக்கப்பட்ட கறி சோறில் காரம் போதவில்லை என சிலர் குறைபட்டு கொள்வார்கள்.
5. சில தாய்மார்கள் எலும்பை நீக்கி கறியை மட்டும் குழந்தைக்கு ஊட்டிக் கொண்டிருப்பார்கள்.
6. மூன்றாம் நாள் பாத்திஹாவிற்கு குர்ஆன் ஓதலாமா? அல்லது மவ்லூது ஓதலாமா? என்ன ஏற்பாடுகள் செய்யலாம் என உறவுகள் ஆயத்தமாவார்கள்.
7. உங்கள் மொபைலில் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கடந்த சோகத்தோடு உறவுகள், நண்பர்கள் தேடுவார்கள்.
8. நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் அலைபேசிக்கு அழைப்புகள் வரும்.
9. அடுத்து அடுத்து வரும் சில நாட்களில் உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சகஜ வாழ்க்கைக்கு செல்வார்கள்.
10. மகனோ/மகளோ லீவு முடிந்து பணிக்கு திரும்பியிருப்பார்கள்.
11. ஒருசில மாத முடிவில் உங்கள் வாழ்க்கைத் துணை TVயில் வரும் ஏதோவொரு நகைச்சுவை காட்சியை கண்டு சிரித்துக் கொண்டிருப்பார். அல்லது தொலைக்காட்சி தொடரில் வரும் குடும்ப சண்டை காட்சி களை கண்டு ரசித்துக் கொண்டிருப்பார்.
12. உலகம் எப்போதும் போல் இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.
13. ஊரில் மழை பெய்யும் அல்லது வெயில் கொளுத்தும், தேர்தல் வரும், திருவிழாக்கள் நடக்கும்.
14. உங்கள் ஊரில் நீங்கள் நெருங்கிப் பழகியவர்களில் யாரோ ஒருசில நண்பர்கள் உங்களை நினைவுபடுத்தி அவ்வப்பொழுது உங்களைப் பற்றி பேசக்கூடும்.
இப்போது சொல்லுங்கள்:
உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக்கூடிய மரணத்தைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள். மரணம் நிகழவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா?
“மரணம் வேண்டி மனிதன் தவமிருப்பான்” என்பதுதான் நிஜம்.
மரணத்தைக் கண்டு பயப்படாமல் மரணத்திற்கு முன்பு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்போம். மார்க்கத்திற்கு முரணாக வேதனையில்லாத, அல்லாஹ்வின் பொருத்தத்தோடு மரணம் வந்தடைய வேண்டும் என துஆ செய்யவேண்டும்.
ஏன் என்றால்;
“எதை விட்டும் நீங்கள் வெருண்டோடுகிறீர்களே அந்த மரணம் உங்களைச் சந்தித்தே தீரும். பிறகு, மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அப்போது உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக! அ.கு. 62:8
இதுவரை மரணத்தைப் பற்றியும், நம் மரணத்திற்கு பிறகு உலகில் நடக்கக்கூடிய எதார்த்தமான ஒரு சில விசயங்களை மட்டும் குறிப்பிட்டுயிருந்தோம். எனவே மரணத்தைக் கண்டு பயப்பட தேவை இல்லை. அது நடந்தே தீரும். அதுவே இனி மரண நேரத்தில் என்ன நடக்கும்; என்ன செய்யவேண்டும், என்ன செய்தால் வெற்றிகரமாக அமையும் என்பதைப் பார்ப்போம்.
தீயவர்களின் மரண நேரத்தில் :
ஏக இறைவனை அல்லது இறை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது என்ன நடக்கும் என்பதை இறைநூல் கூறுகிறது. “இறை மறுப்பாளர்களை, முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களின் ஆன்மாவை கைப்பற்றும். “சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 8:50)
அந்த(மரண) நேரத்தில் தீய மனிதன் கூறுவது:
ஒருவனுக்கு மரணம் வரும்போது;
“என் இறைவனே! நான் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி(உலகத்திற்கு) அனுப்பு” என்று கூறுவான். அவ்வாறு நடக்காது, இது அவன் கூறக்கூடிய (வாய்) வார்த்தை தான். “மீண்டும் அனைவரும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள்வரை இறந்தவர்களின் கண்ணுக்கு தெரியாத தடுப்பு உள்ளது” (அல்குர்ஆன் 23:99,100)
மேலும் பார்க்க : (அல்குர்ஆன் 63 : 10,11)
இறந்தவர்களுக்கும், உயிரோடு உள்ளவர்களுக்கும் இடையில் தடுப்பு உள்ளது என்பதன் பொருள். இறந்தவர்களால் உலகில் நடக்கும் எதையும் அறியமுடியாது, செய்யவும் முடியாது என்பது உறுதி. (தர்ஹா வழிபாடு தவறு என்பதை இந்த வசனம் தெளிவாக கூறுகிறது)
நல்லவர்களின் மரண நேரத்தில் :
“நல்லோராக இருப்பவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும்போது,” “உங்கள் மீது சாந்தி(ஸலாம்) உண்டாகட்டும்” (என்று கூறிவிட்டு), நீங்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றுக்காக சொர்க்கத்தின்பால் ஆன்மாவை (உயிரை) அழைத்து சென்று உள்ளே நுழையுங்கள்” என்று கூறுவார்கள். (அ.கு. 16:32)
மரணத்திற்கு முன்பு என்ன செய்யவேண்டும்:
“மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக” (அல்குர்ஆன் 15:99)
(அதாவது ஏக இறை நம்பிக்கையையும், தொழுகையையும், இறைவனால் கடமையாக்கப் பட்டவைகளையும் மரணம் வரை செய்தே ஆகவேண்டும்) உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் முன்பு அவருக்கு செல்வம் இருந்துவிட்டு சென்றால், பெற்றோருக்கும், உறவினருக்கும் நியாயமான முறையில் (அல்லாஹ் விதித்தந்த சட்டத்தின்படி) மரணம் சாசனம் (உயில்/ வசீயத்து) செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
(இது) இறை நம்பிக்கையாளர்களுக்கு கடமையாகும். (அ.கு. 2:180)
மரணத்திற்கு முன்பாக வெற்றி (சுவர்க்கம் கிடைக்க) பெற என்னென்ன செய்வார்கள்?
A. “அவர்கள் (இறைவனிடம்) பாவன்னிப்புக் கோருவார்கள்,
B. இறைவனை மட்டுமே வணங்குபவர்களாக இருப்பார்கள்,
C. இறைவனை புகழ்வார்கள்,
D. இறைவனுக்காக நோன்பு நோற்பார்கள்,
E. ருகூவு செய்வார்கள், ஸஜ்தா செய்வார்கள்.
F. நன்மையை ஏவி தீமையை தடுப்பார்கள்.
G. இறைவன் விதித்த வரம்புகளை பேணி கொள்வார்கள்”
இத்தகைய நற்செயலை செய்யக்கூடியவர்களுக்கு வெற்றி (சொர்க்கம்) கிடைக்கும் என்ற நற்செய்தியை கூறுவீராக! (அ.கு.9:112) இத்தகைய மூஃமின்களாக நம்மை ஆக்கி வைப்பானாக.