தூக்குத் தண்டனை! மனித நேயமற்ற செயலா?
மறுபதிப்பு :
பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்துவிட்டன. பெரும்பான்மை மக்களின் விருப்பமும் அதுதான். அதனால் இந்தியாவிலும் தூக்குத் தண்டனை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
முதலில் மனிதன் எப்படிப்பட்டக் குணமுடையவன் என்பதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். அற்பப் பொருளிலிருந்து படைக் கப்பட்டவனே மனிதன். பிறந்த மனிதன் மரிப்பது உறுதி. கர்வம் கொண்டவன் மனிதன், உலக இன்பங்களில் மூழ்க விரும்புகிறவனே மனிதன். அவன் துணிச்சல் மிக்கவன் என்பதோடு அவசரக்காரனும் கூட. அறியாமை நிறைந்தவன் மனிதன். பலகீனமானவன் மனிதன். தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறவன் மனிதன். குடித்தல், புகைத்தல், உடம்புக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை விரும்பிச் சாப்பிடுதல் இதற்கு ஆதாரம்.
இவ்வுலகப் பொருள்களை காலாகாலம் வாழ்வது போல் நேசிக்கிறான். 5000, 10,000 வருடங்கள் வாழ்வது போல் சொத்து சேர்க்கிறான். மனோ இச்சையை இறைவனாகக் கொண்டவன் மனிதன்.
கடவுள் நம்பிக்கை தான் இவ்வுலகில் காணப்படும் அனைத்து மூட நம்பிக்கைகளுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுக்கும், ஜாதி வேற்றுமைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முழுமுதல் காரணம் என்று கூறி “கடவுளை மற மனிதனை நினை” என்று வரட்டு வேதாந்தம் பேசும், தங்களைப் பகுத்தறிவாளர்கள் எனப் பீற்றிக்கொள்ளும் நாத்திகர்களும் இடைத்தரகர் களான மதகுருமார்களைப் போல் தங்கள் மனோ இச்சையைக் கடவுளாகக் கொண்டிருக்கிறார் கள் என்பதை அவர்களால் மறுக்கமுடியுமா?
இந்த மதகுருமார்களாலும், நாத்திகர்களாலும் தான் மனித குலம் பேரழிவில், நரகின் விளிம்பில் நிற்கிறது. இல்லை என்றால் அவர்களது பகுத்தறிவும், மனசாட்சியும் கூடாது, கெட்டது, செய்யத் தகாதது எனக் கடுமையாக எச்சரிக்கும் காரியங்களில் மன இச்சையால் தூண்டப்பட்டு லஞ்சம், ஊழல், புகைத்தல், குடித்தல், விபச்சாரம், கற்பழிப்பு போன்ற காரியங்களில் ஈடுபடுவது, அவர்கள் தங்கள் மனோ இச்சையைக் கடவுளாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தவில்லையா? அதிகபட்சம் இவ்வுலகில் 100 ஆண்டுகள்தான் வாழமுடியும் என அவர்களது பகுத்தறிவு கூறியும் 1000, 5000, 10,000 வருடங்கள் வாழ்வது போல் அதுவும் முறையாக அல்ல. முறை தவறி பல அப்பாவிகளின் வயிற்றில் அடித்து பல்லாயிரம், லட்சம் கோடி மோசடி என ஊரையே வளைத்துப் போட்டுச் சொத்துச் சேர்த்து குவித்து வைத்திருப்பது அவர்கள் மனோ இச்சையைக் கடவுளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உண்மைப்படுத்தவில்லையா? இதையும் குர்ஆன் 4:135, 7:176, 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
மனநிலையை மாற்றிக் கொண்டிருப்பவன் மனிதன். ஆக இத்தனைக் குறை குணங்களை யுடைய மனிதன் சட்டம் இயற்றினால் அது மனிதனுக்குப் பலன் தருமா?
திருடனிடமே, கொலைகாரனிடமே அவற்றிற்குரிய தண்டனையைக் கொடுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டால் அத்தண்டனை எப்படிப்பட்டதாக இருக்கும்?
அதிகமான மக்கள் ஒன்றை விரும்பிச் செய்தால் அது மனிதனை அழிவில் கொண்டு சேர்க்கவே செய்யும். இன்று நாட்டில் குடி, விபச்சாரம், கற்பழிப்பு, கொலை, சிசு கொலை, வன்கொடுமைகள், பெண்கள் கொடுமைப்படுத்தப்படல், கள்ளக்கடத்தல், போதைப் பொருள் கள் கடத்தல், இலஞ்சம், ஊழல் என இவை அனைத்தும் நீக்கமற நிறைந்து காணப்படுவதற்கு அடிப்படைக் காரணமே மனிதனே மனிதனுக்காகச் சட்டம் இயற்றி அதையே கடைப்பிடிப்ப தாகும்.
இதை இறைவனின் இறுதி வழிகாட்டி நெறிநூலின் அல்அன்ஆம் 6:116 இறைவாக்கு இப்படிக் கூறுகிறது.
“பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றினால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின் பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்பனைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். (6:116)
இன்று உலகில் மிகமிகப் பெரும்பான்மையினர் சிலை வணக்கம், சிலுவை வணக்கம், சமாதி வணக்கம், மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிரதாயங்கள், குறி கேட்டல், ஜோதிடம், ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம், திருமணச் சடங்குகள், பெண் ருதுவான சடங்குகள், முஸ்லிம்களின் கத்னா சடங்குகள் இத்தியாதி இத்தியாதி சடங்குகள் அனைத்தும் இறைவன் குறிப்பிடுவது போல் வெறும் யூகங்களும், கற்பனைகளுமான முழுக்க முழுக்க மூட நம்பிக்கைகள் நிறைந்தவையே.
மனிதன் வெற்றிபெற வேண்டுமென்றால் மனிதர்கள் கற்பனை செய்யும் சட்டங்களைப் புறக்கணித்து இறைவன் மனிதனுக்காக அளித்த சட்டங்களையே பின்பற்றக் கடமைப் பட்டுள்ளான்.
இறுதி வழிகாட்டல் நெறிநூல் குர்ஆன் அல்மாயிதா உணவு மரவை 5:32 இவ்வாறு கூறுகிறது. “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தைத் தடுக்கவோ அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாவான். மேலும், எவரொருவர் ஒரு மனிதனை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்கள்…..” (5:32)
இக்கருத்து 1500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதனின் சுயக் கருத்தாக இருந்தால் அதைத் தூக்கி குப்பையில் கடாசி விடலாம். ஆனால் இச்சட்டத்தைச் சொல்வது அண்ட சராசங்களைப் படைத்து, உலகைப் படைத்து, மனிதனைப் படைத்த முக்காலமும் அறிந்த இறைவனின் கட்டளையாகும். அதைப் புறந்தள்ளுவது மனிதனுக்குக் கேட்டையே விளைவிக்கும்.
தூக்குத் தண்டனை அமுலில் இருக்கும் நிலையிலேயே இன்று தினசரி இந்தியா முழுவதும் எத்தனைக் கொலைகள் விழுகின்றன என ஒரு புள்ளி விபரம் எடுத்துப் பாருங்கள். இந்த நிலையில் தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்டால் தினசரி கொலைகளின் எண்ணிக்கை கட்டுக்குள் அடங்குமா என சிந்தித்துப் பாருங்கள்.
அதே சமயம் இன்றைய நீதித்துறை பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆதிக்கச் சக்திகளின் விருப்பமே நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படுகிறது. ஒருவருக்கு தூக்குத்தண்டனை அளிப்பதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்றாலும் பெரும்பான்மையினரின் விருப்பம், நம்பிக்கை என்ற அடிப்படையில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் போன்ற அப்பாவிகளுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. அதே சமயம் ஆதிக்கச் சக்திகள் எண்ணற்ற கொலைகளுக்குக் காரணகர்த்தாக்கள் என்பதற்கு உள்ளங்கை நெல்லிக்கனியாக ஆதாரங்கள் கிடைத்தாலும், விசாரணைக் கமிசன்களே உறுதி செய்தாலும் அவர்கள் மீது எவ்விதக் குற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதும் இல்லை. அப்படியே எடுத்தாலும் குற்றச் செயலுக்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. அதனால் விடுதலையாகிறார் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்னால் தென் இந்தியாவில் மாமனாரைக் கொலை செய்த மருமகன் பெரும் செல்வந்தராக இருந்தும், தேவர் சமுதாயத்தையே தன் கைக்குள் வைத்திருந்தும், பிரிட்டனிலிருந்து மிகமிக பிரபல்யமான வக்கீலைத் தனக்குச் சாதகமாகப் பெருந்தொகை கொடுத்து ஏற்படுத்தி இருந்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பிரிவி கவுன்சிலரை மேல் முறையீடு செய்தும் பலனில்லை. இறுதியில் அன்றைய ராணிக்கு தனது எடையளவு தங்கம் கொடுப்பதாகப் பேரம் பேசியும் எடுபடவில்லை. இறுதியில் தூக்கிவிடப்பட்டார் என்பது அன்றைய செய்தி. அந்நியன் நமது நாட்டை ஆண்டாலும் மக்களுக்கு நீதி கிடைத்தது. இன்று அந்த நீதி செத்துவிட்டது.
நீதிபதிகளிடம் பேரம் பேசி அவர்களை விலைக்கு வாங்கும் கோரக் காட்சிகளே இன்று அரங்களேறி வருகின்றன. இந்த நிலை நீடித்தால் நாடு சுடுகாடாகும். அறிவுஜீவிகளே சிந்தியுங்கள். நீங்கள் மக்களை நேசிப் பீர்களானால், மனித நேயத்தை மதிப்பீர்களானால், மனிதச் சட்டங்களை ஒழித்துக்கட்டி இறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வாருங்கள்.