ஐயமும்! தெளிவும்!!

in 2008 ஜூன்,ஐயமும்! தெளிவும்!!

 ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: மார்க்கத்தில் பிரிவினையை உண்டாக்காதீர்கள் என இறைவன் குர்ஆனில் கூறுவதைக் கண்டும், நீர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற புதிய பிரிவை உண்டாக்கி விட்டீர். உங்கள் ஊரில் முஸ்லிம்கள் இல்லையா? உங்களுக்கு ஜமாஅத் இல்லையா? அங்கே ஊர் தலைவர் இல்லையா? செயலாளர், பொருளாளர் இல்லையா? நீர் எதற்கு புதிய தலைவர் ஆகிறீர்? அவர்களுடன் இருந்தே நன்மையைக் கூறி தீமையை எதிர்க்கக்கூடாதா? அவர்கள் திருந்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்? திருந்தியவருக்கு ஒரு தலைவர், திருந்தாதவருக்கு ஒரு தலைவரா? பிரிவினை செய்யாதே என மற்றவர்களுக்குக் கூறி விட்டு, நீர் பிரிவினை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது?    அல் அமீன், மெட்ரோ ஃபுட்வேர், திருவனந்தபுரம்.

தெளிவு: உம்மத்தில் பிரிவினை இருக்கக்கூடாது என்ற உயரிய எண்ணம் தங்களிடம் இருப்பதால், தாங்கள் இதுபோன்ற வினாக்களை எழுப்புகிறீர்கள். உயரிய எண்ணம் கொண்டுள்ள தங்களுக்கு அல்லாஹ் நேரான வழியை விளங்கிக் கொள்ளச் செய்வானாக.

    தாங்கள் ஒரு விஷயத்தைத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற பெயரில் பிரிவினை செய்வதாக தாங்கள் எம்மீது குற்றம் சுமத்துகிறீர்கள். இது உங்களின் தவறான எண்ணம்; இந்தத் தவறான எண்ணத்தால் மென்மேலும் தவறாகவே சிந்திக்கறீர்கள்.

    எமது எண்ணத்தில் சுயமாக சிந்தித்து “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் ஜமாஅத்தை நாமாக ஆரம்பிக்க வில்லை. முஸ்லிம்கள் அனைவருமே ஒருங்கிணைந்து “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் ஒரே ஜமாஅத்தாக செயல்பட வேண்டும் என, அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உம்மத்திற்கு உபதேசித்துள்ளார்கள். அந்த உபதேசத்தை இந்த இதழின் பின்பக்க அட்டையில் உள்ள ஹதீஸில் பார்த்துக் கொள்ளுங்கள்.

    எங்கள் ஊரிலும் சரி, உங்கள் ஊரிலும் சரி மற்ற எல்லா ஊர்களிலும் சரி, இருக்கின்ற ஜமாஅத்துகள் அனைத்துமே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் பெயரில் இல்லாமல், வேறு பற்பல பெயர்களைச் சூட்டிக் கொண்டு தனித்தனியாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றன. அவர்களில் மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத், பலதரப்பட்ட தரீக்காவினர்.

    ஜமாஅத்தே இஸ்லாமிய, SIM, SIO, ஜாக், ததஜ என இன்னும் பல பெயர்களில் பிரிவுப் பெயர்களில் நீண்டகாலமாக செயல்படுகின்றனர். இவர்களுக்கெல்லாம் ஜமாஅத் இல்லையா? தலைவர் இல்லையா? செயலாளர் இல்லையா? என நீங்கள் அவர்களைக் கேட்டதில்லை. மேலும், மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது எனக்கூறி கொள்ளும், ஹனஃபீ, ஷாஃபீ என சொல்லாதே என்றும் உங்களிடம் உபதேசம் செய்துவிட்டு, தாங்கள் மட்டும் அஹ்லே ஹதீஸ் ஜமாஅத், முஜாஹித் ஜமாஅத், ஸலஃபீ ஜமாஅத், ஜம்யிய்யத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH)  ஜமாஅத், ததஜ என உம்மத்தைப் பிரித்துக் கொண்டவர்களிடமும் தாங்கள் இந்தக் கேள்விகளைக் கேட்டதில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் உபதேசத்திற்கிணங்க “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என நாம் கூறுவதில் தாங்கள் குறை காண்கிறீர்கள்.

    தாங்கள் சுட்டிக் காட்டுகின்ற ஜமாஅத்களின் தலைவர்களும், செயலாளர்களும், பொருளாளர்களும் ஆக அனைவருமே, அவர்கள் நடத்தி வைக்கின்ற திருமணங்களில், நிக்காஹ் ரிஜிஸ்டரில் கூட (தஃப்தர்) மணமகன், மணமகள், வலீ, 2 காட்சிகள் என ஒவ்வொருவரையும் முஸ்லிம் என்று மட்டும் பதிவு செய்யாமல், ஹனஃபி, ஷாஃபிஈ என்றும் பதிவு செய்கின்றனர். “முஸ்லிம்” என கூறுவது எவ்வளவு அழகாய் இருக்கிறது. முஸ்லிம் சகோதரர்களில் ஒருவரை ஹனஃபி என்றும், மற்றவரை ஷாஃபிஈ என்றும் கூறும்போது வேறுபாடு தெரிகிறதல்லவா? முஸ்லிம்களை பிரித்தாளும் சதிதானே இது? இதற்கு திருகுர்ஆனிலும், நபிவழியிலும் எள்ளளவும் ஆதாரம் கிடையாது.

    மத்ஹபுகள் இஸ்லாத்தில் கிடையாது எனக்கூறுபவர்களும், தங்களது நிக்காஹ் ரிஜிஸ்டரை ‘ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ என அச்சிடாமல் JAQH, அஹ்லே ஹதீஸ்… தவ்ஹீத் ஜமாஅத், ததஜ என்றல்லவா அச்சிட்டிருக்கிறார்கள். (ஒரு சிலர் இப்படி செய்யாவிட்டாலும், அவர்கள் கூட அந்த இயக்கங்களின் ஆதரவாளர்களாகத் தானே இருக்கிறார்கள்).

    ஜமாஅத்தார்கள் திருந்திக்கொண்டுதானே இருக்கிறார்கள் என தாங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் தெளிவாக இருந்தும் கூட பல பிரிவினைப் பெயர்களில் நூற்றாண்டுகாளக செயல்பட்டுக் கொண்டிருப்பது, அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையே காட்டுகிறது. அவர்கள் திருந்துவார்கள் என நம்பிக்கை வைக்கலாம். அதற்காக அவர்களுடனிருந்து கொண்டு அவர்கள் திருந்துவார்கள் என நம்பிக்கை வைக்கலாம். அதற்காக அவர்களுடனிருந்து கொண்டு அவர்களைப் போல செயல்பட முடியுமா? அனைத்துப் பிரிவுகளை விட்டும் விலகிவிடு; மரவேர்களைச் சாப்பிட்டு மரணிக்க நேர்ந்தாலும் பிரிவுகளில் இருக்காதே என்ற நபி(ஸல்) அவர்களின் உறுதியான கட்டளையை நீங்கள் மதித்து நடந்தால் இப்படிக் கூற முடியுமா,? அப்படிப் பார்த்தால், இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டாம். கிருத்துவத்திலிருந்து கொண்டே இஸ்லாத்தைப் போதித்திருக்கலாம். யூத மதத்திலிருந்து கொண்டே இஸ்லாத்தைப் போதித்திருக்கலாம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

    “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்பது திருந்தியவர்களுக்கென்றோ, திருந்தாதவர்களுக்கென்றோ தனித்தனி ஜமாஅத் அல்ல. அனைத்து முஸ்லிம்களையும் குர்ஆன், ஹதீஸ் இரண்டின் அடிப்படையில் மட்டுமே ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு ஜமாஅத் ஆகும். நாம் உம்மத்தைப் பிரிக்கவில்லை. பல பிரிவுகளாக இருக்கும் உம்மத்தினரை நபி(ஸல்) அவர்கள் காட்டிய “ஜமாஅத் அல் முஸ்லிமீனில்” ஒருங்கிணைக்கவே முயல்கிறோம்.அனைத்து ஜமாஅத்தும் ஒருங்கிணைந்துவிட்டாலோ அல்லது ஒருங்கிணைய விருப்பமுள்ள ஒரு சில ஜமாஅத்தினர் மட்டும் இணைந்து விட்டாலோ அல்லது குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவர்கள் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” எனும் பெயரில் உலகில் எங்கேனும் ஒரு மூலையில் இருப்பது எமக்குத் தெரியவந்தாலும் கூட தகுதியான ஒருவரை அமீராக நியமித்து அவரின் கீழ் செயல்பட நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். நாம் தான் அமீர் என எப்போதும் நாம் மார்தட்டிக் கொண்டதில்லை.

    நீங்கள் கூறியுள்ள அனைத்து ஜமாஅத்களும் மற்ற முஸ்லிம்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் குறிக்கோளுடன் இவர்களாக வைத்துக் கொண்ட பெயர்களாகும். எனவே இவை அனைத்தையும் விட்டும் வெளியேறி, முஸ்லிம்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துக் காட்டும் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அவர்கள் நடத்திக் காட்டியதும். அதனையே பற்றிப் பிடிக்கக் கட்டளையிட்டதுமான ஜமாஅத்தாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு மற்றொரு சகோதரர் விடுத்துள்ள வினாவையும், அதற்கான விடையையும் படித்துப் பாருங்கள்.

ஐயம்: “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” ஹதீஸின் விளக்கம் முழுமையாகப் புரியவில்லை. விளக்கவும்; இயக்கம், கழகம் போன்றவற்றை விட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என்பதுபோல் உள்ளது. விளக்கம் தரவும்; அப்படியானால் த.மு.மு.க. இஸ்லாமிய அமைப்புகளான S.I.O., S.I.M., IIM., etc., இஸ்லாமிய அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் குறித்து விளக்கவும்; இவற்றிலிருந்து அந்நஜாத் எவ்வாறு வேறுபடுகிறது; விளக்கவும்; A.ரசூலுதீன், புரசைவாக்கம், சென்னை.

தெளிவு:  ‘விளக்கம் தரவும்’ என கேட்டுள்ள தாங்கள், இயக்கம், கழகம் இவைகளை விட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என சரியாகவே விளங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அரசியலுக்கென ஒரு இஸ்லாமிய இயக்கம், பிறருக்கு உதவி செய்வதெற்கென சில இஸ்லாமிய அமைப்புகள், இப்படியாக உம்மத்தை தனித்தனியாக கூறுபோட வேண்டிய அவசியம் இல்லை. இப்படிக் கூறு போடுவதால் யார் அதிக உதவிகள் செய்தது. யார் மக்களின் உரிமைகளை அதிகமாகப் பெற்றுத் தந்தார்கள் என உம்மத்துக்குள்ளேயே யார் பெரியவன் என்ற போட்டிதான் ஏற்படும். சகோதர முஸ்லிம்களை எதிரிகளாக உருவாக்கும் முயற்சிகளே இவைகள் என்பதை நடைமுறையில் கண்டு வருகின்றோம்.

    அனைத்து நல்லதையும் உள்ளடக்கியதே இஸ்லாம். “எந்த நல்லதின்மீதும் உங்களை நான் ஏவாமல் விட்டதில்லை; (அதே போல) எந்த தீயதை விட்டும் உங்களை நான் தடுக்காமல் விட்டதில்லை” என நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியது இஸ்லாத்தில் இருந்து கொண்டேதானே ஒழிய, அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.

    எங்களின் அமைப்புக்கள், அனைத்து நல்லதை உள்ளடக்கியதுதான் என சில அமைப்புகள் கூறிக் கொண்டாலும், பெயர் வைத்து செயல்படத் தேவையே இல்லை; நிர்வாக வசதிக்காக பெயரிட்டுக் கொள்ளலாம் என வாதிப்பவர்கள், அழகிய முன்மாதிரி நபி(ஸல்) அவர்களிடம் மட்டுமே இருப்பதாக அல்லாஹ் கூறி இருப்பதால் (அல்குர்ஆன் 33:21) தமது இறுதி காலத்திற்குள் இஸ்லாம் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவ ஆரம்பித்து மிகப்பெரிய நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள், தமது நிர்வாக வசதிக்காக ஒரு பெயர் சூட்டிக் கொள்ளாததை நினைவு கூர்ந்து, நபி(ஸல்) அவர்களின் முன் மாதிரியின் அழகைக் கண்டு திருப்திகொண்டு, தம்மை திருத்திக் கொள்வார்களாக; குர்ஆனையும், ஹதீஸையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என உபதேசிப்பவர்கள், உபதேசம் பிறருக்குத்தான் நமக்கல்ல என்ற ரீதியில் செயல்பட வேண்டாம் எனக்கூறிக் கொள்கிறோம்.

நடைமுறையில் நாம் கண்டு அனுபவித்து வந்தது என்ன?

    அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தராத பெயரில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள், அவரவர் பிரிவுகளின் பெயராலேயே பிளவுபட்டு பிரிந்து விட்டனர். தத்தமது பிரிவினர் கூறுவதுதான் சரி என தக்லீது செய்ய முற்படுகின்றனர். “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” அல்லாஹ் இட்ட பெயரில் செயல்பட்டால், குர்ஆன் என்ன சொல்கிறது? ஹதீஸ் என்ன சொல்கிறது? என்று, பிரச்சனைகளை குர்ஆன், ஹதீஸுடன் அணுகுவோம். பிரிவுப் பெயர்களில் செயல்படும்போது, நமது தலைவர் சொல்வதுதான் சரி என்ற ரீதியில் செயல்பட்டு, மற்ற பிரிவினரிடம் குறைகள் காண நேரிட்டு வருகிறது. இதனால் சண்டை சச்சரவு, காழ்ப்புணர்ச்சி அனைத்தும், சகோதரர்களாய் வாழவேண்டிய முஸ்லிம்களிடம் ஏற்பட்டு விட்டது. மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் அல்ல இவை.

    எல்லாவற்றிற்குமே குர்ஆனும், ஹதீஸும் தான் சரியான தீர்வைத் தருகின்றன எனக் கூறிக்கொண்ட இரு வெவ்வேறு அமைப்பினர் பள்ளிவாசல் நிர்வாகம்,  எந்த இயக்கத்திற்கு என்ற பிரச்சனையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, நேரம், பொருள் இரு அமைப்பினர்களுக்கிடையே வீண் விரயம் செய்து, அரசு அதிகாரிகளின் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்த நிலையை சமீபத்தில் கண்டோம். யார் பெரியவன் என ஒரு போராட்டமே நடந்து முடிந்தது. தங்கள் பிரச்சனைகளுக்கு குர்ஆனும், ஹதீஸும் வழிகாட்டாதது போல இவர்கள் நடந்து கொள்கின்றனர். திருப்பூரிலும் மற்றும் பல இடங்களிலும் இவர்களே போட்டி ஜும்ஆ நடத்தும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

    குர்ஆனையும், ஹதீஸையும் பின்பற்றாததால் ஒருவர் மற்றவரின் மீது குறை கண்டு எட்டப்பன் வேலை செய்து காட்டி கொடுத்தல், இழிசொற்களால் விமர்சித்தல் போன்ற நாலாந்தர பணிகளில் மூழ்கி விடுகின்றனர்.

    “நிச்சயமாக உங்களின் இந்த ‘உம்மத் ஒரே உம்மத்துதான்” என படைத்தவன் கட்டளையிட்டு விட்ட பின்பும், உம்மத்தில் தனித்தனி ஜமாஅத்துக்கள் முஸ்லிமிற்கு தேவையா என சிந்தனை செய்யுங்கள்.

    “எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, (ஸாலிஹான) நல்ல அமல்கள் செய்து, “நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?” என அல்லாஹ் 41:33வது இறைவாக்கில் அறிவுறுத்துவதைப் பலமுறை படித்து, சிந்தித்துணர்ந்து, நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி “ஜமாஅத் அல் முஸ்லிமீனில்” (முஸ்லிம்களின் ஜமாஅத்) செயல்படுவோமாக.

ஐயம்: வெளியூர் பயணம் செல்வோர், நான்கு ரகாஅத் தொழுகைகளை (மட்டும்) இரண்டு ரகாஅத்களாக தொழ சலுகை உண்டு என்பதைத் தெரிந்திருக்கிறேன். அருகில் உள்ள ஊர்களுக்குப் பயணங்களுக்கு மட்டுமே இந்த சலுகையா? நீண்ட தொலைவு என்றால் எத்தனை மைல்கள்? விரிவாக விளக்கம் தரவும்! “சிலர் 48 மைல்கள்” என்கிறார்களே! அது சரிதானா?அன்சாரி, திருச்சி.

தெளிவு: “48 மைல்கள்” என்பதற்கு ஹதீஸில் அறவே ஆதாரம் கிடையாது. மூன்று நாள் பிரயாண தூரம் என்று கூறுவதற்கும் ஆதாரம் இல்லை. மாறாக முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸ் ஒன்றைக் கீழே ஒன்றைக் கீழே தருகிறோம்.

யஹ்யா இப்னு யஸீத்(ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:

    தொழுகையை கஸர் செய்யும் தூரத்தைப் பற்றி அனஸ்(ரழி) அவர்களிடம் நான் கேட்டபோது “நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல்கள் அளவு அல்லது மூன்று “பர்ஸக்” அளவு பயணம் செய்யும்போது கஸர் செய்பவர்களாக இருந்திருக்கின்றனர்” என்று அவர்கள் கூறினார்கள்.

    இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள “மைல்” என்பதும் “பர்ஸக்” என்பதும் வெவ்வேறான தூரங்களைக் கொண்டதாகும். அதாவது மூன்று மைல்களைக் கொண்டது ஒரு “பர்ஸக்” ஆகும். இந்த ஹதீஸில், அறிவிப்பாளர் “மூன்று மைல்கள் அல்லது மூன்று பர்ஸக்கள்” என்று சந்தேகத்திற்குரிய சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இரண்டில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்கமுடியும். இந்த இடத்தில் அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை ஸயிது இப்னு மன்ஸூர் அவர்கள் பதிவு செய்து வைத்துள்ள, ஹாபிழ் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் தனது “தல்கீஸ்” என்ற நூலில் எடுத்து எழுதியுள்ள ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. அது வருமாறு:

நபி(ஸல்)  அவர்கள் ஒரு “பர்ஸக்” பயணம் செல்லும் போது கஸர் செய்வார்கள்”. அறிவிப்பாளர்:அபூஸயீது அல்குத்ரி(ரழி)

    இந்த ஹதீஸில் “ஒரு பர்ஸக்” என்ற சொல் இடம் பெற்றுள்ளதால், முந்தைய ஹதீஸில் “மூன்று மைல்” என்பதே சரியானதாக இருக்கும் என்று தெரிய முடிகின்றது. ஏனெனில் மூன்று மைல் என்பதும் ஒரு பர்ஸக் என்பதும் ஏறக்குறைய ஒரே தூரத்தைக் கொண்டவைதான்.

    ஹதீஸ் கலையின் மாமேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் “அனஸ்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட இந்த ஹதீஸ்தான் கஸர் பற்றி ஹதீஸ்களில் மிகவும் வலுவானது, தெளிவானது” என்று குறிப்பிடுகிறார்கள்.

    எனவே ஹதீஸ்களிலிருந்து மூன்று மைல்கள் தூரம் பயணம் செல்பவர்களே கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.

    அன்றைக்கு வழக்கில் இருந்த “அரபு நாட்டு மைல்” என்பது 1748 மீட்டர்களாகும். மூன்று மைல்களுக்கு 5244 மீட்டர்களாகின்றது. அதாவது ஐந்தேகால் கிலோமீட்டர் பயணம் செய்பவர்கள் கஸர் செய்யலாம் என்பதே ஹதீஸ்களிலிருந்து தெரியவருகின்றது.

    தெளிவான ஹதீஸ்கள் இருக்கும்போது எவருடைய சொந்த அபிப்பிராயங்களுக்கும் நாம் கட்டுப்படுவது மாபெரும் குற்றமாகும். “48 மைல்கள்” என்று கூறுவோர் அதற்கான ஹதீஸ்களை வெளியிடட்டுமே. நபிகள் காட்டிய மார்க்கத்துக்கு மாற்றமாக எவர் சொன்னாலும் ஒரு மூஃமின் அதனை ஏற்க முடியர்து. இன்னும் சொல்லப்போனால் “ஒரு மைல் தூரத்துக்கே நபி(ஸல்) அவர்கள் கஸர் செய்திருப்பதாக இப்னு உமர்(ரழி) அவர்கள் மூலம் இப்னு அபீ ஷைபா பதிவு செய்திருக்கிறார்கள். இந்த ஹதீஸை விட அந்த ஹதீஸ் பலமானதாக உள்ளதால் அதன் அடிப்படையில் நாம் விளக்கம் தந்துள்ளோம்.

    48 மைல்கள் என்பவர்கள் நேரடியாக ஹதீஸ் எதனையும் கூறியதாக தெரியவில்லை.

    தெளிவான ஹதீஸ் அடிப்படையில் ஐந்தேகால் கிலோ மீட்டர் பயணம் செல்பவர்கள் தொழுகைகளைக் கஸர் செய்யலாம் என்று தெரிகின்றது.

    (குறிப்பு: இந்த விளக்கம் தவ்ஹீத் மவ்லவிகள்?) அனைவரும் எம்மோடு இருக்கும் போது, அனைவரும் தீர்க்கமாகப் பரிசீலனை செய்து ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அந்நஜாத் 1986 ஜூன் இதழ் பக்கம் 35ல பி.ஜே.தனது பெயரிலேயே வெளியிட்டதாகும்).

Previous post:

Next post: