நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்

in 2010 மார்ச்

நடைமுறையில் உள்ள மிக மோசமான துஆவும் அதன் பொருளும்

மெயில் பாக்ஸ் :
ஆடூர்-யாசீர் (துபை) அவர்களின் கட்டுரையை ஸ்.கலீல் அஹமது(அல்கோபர்) அவர்கள் எமக்கு மெயிலில் அனுப்பியுள்ளார்.
அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இதனைப் பிரசுரித்துள்ளோம். M.அப்துல் ஹமீது, திருச்சி

திருமண வைபவங்களில் இன்று மிக முக்கியமாக ஓதப்பட்டு வரும் “”நபிமார்களைப் போல் வாழ்க” என்ற வாழ்த்துத் தொடரின் பின்னணியைப் பலரும் புரியாது ஓதி அதற்கு ஆமீன் கூறி வருவதைப் பார்க்கிறோம். அதை ஓதாவிட்டால் திருமணமே கூடாது என்ற ஒரு மாயையே மக்களிடையே ஏற்படுத்தி விட்டனர். ஓதித்தான் தீர வேண்டுமென பிடிவாதம் பிடிப்போர் “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா கமா அல்லஃப்த்த பைன ஆதம் வஹவ்வா வநூஹ் வ பாரிஸா வ இப்றாஹீம் வஸாரா வயூஸுஃப் வ ஸுலைஹா …” இவர்களைப் போல் வாழ்க என்ற வாழ்த்துவதின் பின்னணியைக் கவனியுங்கள்.

1. நபி ஆதம் ஹவ்வா போல் வாழ்க!
1. ஆதமும் ஹவ்வாவும் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
2. இறைவன் தடுத்த சுவர்க்கத்துக் கனியை உண்டத ற்காக இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
3.அதனால் சுவர்க்கத்திலிருந்து உலகிற்கு வீசப் பட்டார்கள்.
4.பின்னர் கணவனும் மனைவியும் பல்லாண்டுகள் பிரிந்து வாழ்ந்தார்கள்.
இந்த மணமக்களும் துன்பத்திற்கும், இறைக் கோபத்திற்கும் ஆளாகி பிரிந்து வாழ வேண்டுமா?
2.நபி நூஹும் ஃபாரிஸாவும் போல் வாழ்க!

நூஹு(அலை), லூத்(அலை) ஆகிய இருவருடைய மனைவியரும் நமது இரு நல்லடியார்ககளின் மனைவிகளாக இருந்தனர். அவர்களிருவரும் அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே (அந்த இறைத் தூதர்களால்) அவ்விருவரையும் இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியவில்லை. இருவரும் நரகிற்குச் செல்வோருடன் சேர்ந்து நுழையுங்கள் என்று கூறப்பட்டது. (66:10)
இவ்வசனத்தின் மூலம் நூஹ் நபி, லூத் நபி இருவரின் மனைவியர் இருவருமே நரகவாசிகள் என மிகத் தெளிவாகவே குர்ஆன் அறிவித்து விட்டது. இவ்வசனத்தில் இரு நபிமார்களின் இரு மனைவியரும் இறை மறுப்பாளர்களாக இருந்து தங்கள் கணவர்களுக்குத் துரோகம் செய்து நரக வாசியாகவும் ஆகிவிட்டதை இறைவன் உலகோருக்குப் பிரகடனப்படுத்துகிறான். இதைத் தெரிந்தும் நரகவாசியான மனைவியோடு வாழ்வது போல் வாழ்க என வாழ்த்தலாமா?

3. நபி இப்றாஹீம், ஸாரா போல் வாழ்க!
இப்றாஹீம் நபி-ஸாரா தம்பதியருக்கு நீண்ட நெடுங்காலமாகவே (முதுமை வரை) குழந்தைப் பேறே இல்லாதிருந்தது.
எனது கேடே! மாதவிடாய் நின்று நான் கிழவியாகவும் எனது கணவர் வயோதிகராகவும் இருக்க நான் (கர்ப்பமாகி) பிள்ளை பெறுவேனா?
நிச்சயமாக இது ஆச்சரியமான விசயம் என்று அவரது மனைவி கூறினார் என அல்குர்ஆன் 11:71,72 கூறுகிறது.

வயது முதிர்ந்து கிழப்பருவம் வரும் வரை குழந்தைப்பேறே இல்லாதிருந்ததைத்தெரிந்தும் இவ்வாறு வாழ்த்தலாமா? எந்தத் தம்பதியர் வயது முதிரும்வரை குழந்தைப் பேறில்லாதிருப்பதை விரும்புவர்? ஆசையோடு எதிர்பார்க்கும் புதுமணத் தம்பதியரை இப்படி வாழ்த்தலாமா?

4. நபி யூஸுஃப்-ஸுலைஹா போல் வாழ்க!
1. குர்ஆனிலோ ஹதீஸிலோ ஸுலைஹாவைப் பற்றி எந்த இடத்திலும் கூறப்படவே இல்லை. இந்த ஸுலைஹா யார்?
2. அறிமுகமே இல்லாதவரை மனைவியாக்க முன் வந்தது எப்படி?
3. குர்ஆனில் யூஸுஃப் நபியை அடிமையாக வளர்த்தவர் தான் பிற்காலத்தில் நபியின் மனைவியாக சித்தரிக்கப்படுகிறார். அது எப்படி?
அல்குர்ஆனே இவள் தவறு செய்து விட்டாள் என வர்ணிக்கிறது. தவறு செய்தவள், முன்னைய கணவனுக்குத் துரோகம் செய்தவள் நபியின் மனைவியாக முடியுமா?
4. இவளை நபியுடன் இணைத்து ஓர் காதற் காவியம் இயற்றியது அபாண்டமான பழியல்லவா?
5. திருமணம் நடந்ததாக ஆதாரமே இல்லாத ஒருவளை- ஒரு தம்பதியை குறிப்பிட்டு வாழ்த்தலாமா? இது முறையா?
பல தீமைகளைத் தொடர்ந்து செய்த ஒரு பெண்ணை ஒரு நல்லடியாருக்கு அதுவும் ஒரு நபிக்கு மனைவியாக்க வேண்டுமென்ற நிர்பந்தம் என்ன?
6. இன்னொருவரின் மனைவியை அதுவும் வயது முதிர்ந்த கிழவியை கன்னிப் பெண்ணாக உருமாற்றி திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அவசியம் என்ன?
7. அப்படி ஒரு அதிசயம் நடந்திருந்தால் அதை அல்லாஹ் குர்ஆனிலேயே அறிவித்திருப்பானே?
8. அஹ்ஸனுல் கஸஸ்-அழகிய வரலாறு என்று கூறி ஒரு அத்தியாயம் முழுவதிலும் யூசுஃப் நபியின் அற்புத வரலாற்றை சுவைபட பிறப்பு முதல் இறுதி வரை கூறிய இறைவன் இதை எவ்வாறு கூறாது விட்டிருப்பான்?

இவ்வளவு பிரச்சனைக்குரிய விசயத்தை கட்டாயமாக அதுவும் மகிழ்ச்சிகரமான மண விழாவில் புதுத் தம்பதியை வாழ்த்துவதற்காகக் கூறித்தான் ஆக வேண்டுமா? மார்க்க ஞானமுள்எவரும், மார்க்கத்தைத் தெரிந்து கொள்ள விரும்புபவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
இந்த துஆவை ஓதாமல் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த “பாரகல்லாஹுலக வ பாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீகைர்’-அல்லாஹ் உங்களுக்கு உள்ளும் புறமும் அருள் புரிந்து நல்லக் காரியங்களில் உங்கள் இருவரையும் ஒன்றிணைத்து வைப்பானாக… (நபிவழி துஆ அபூஹு ரைரா(ரழி) அறிவிக்கும், இந்த ஹதீஸ் அஹ்மத், அபூ தாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
இந்த துஆவை மட்டும் ஓதினால் திருமணம் தடுக்கப்பட்டதாகி விடுமா? இல்லை பாவமான காரியமாகி விடுமா? இல்லை அல்லாஹ்வால் இந்த நிக்காஹ் புறக்கணிக்கப்பட்டு விடுமா?

(மவ்லவிகளை பதில் சொல்லுங்கள். இப்போதாவது உங்களுக்கு அச்சம் ஏற்படுகிறதா?)
ஒருபோதும் இல்லை என்பது அறிவு ஜீவிகளுக்கு நன்றாகவே புரியும். அப்படி இருந்தும் பல விதமான குழப்பங்கள் அடங்கிய-ஏன் குழப்பங்களே இல்லாமல் மிகவும் தெளிவாக (அல்லாஹ்வால் குர்ஆனிலே அவர்களைப் பற்றி சொல்லப்பட்டு) தவறு என்று விளங்கக் கூடிய இந்த பாவமான சாபக்கேட்டை நாமாகவே கேட்டுப் பெற்றுக் கொள்வதா?

அறிவு ஜீவிகள் புகுந்து பிரித்து அறியக்கூடிய ஜீவிகள் கேட்கிறார்கள். பல ஆண்டு காலமாக யாரும் இந்த துஆக்களை கேட்கவில்லையா? அவர்கள் எல்லோரும் நாசமாகி வாழ்க்கையில் சந்தோசமே இல்லாமல் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கி றார்களா? அவர்கள் ஒன்று சேர்ந்து வாழாமல் தான் போய்விட்டார்களா? அல்லது குழந்தை பாக்கியம் தான் இல்லாமல் போய்விட்டதா என்று? இது ஷைத்தான் அழகாகக் காட்டும் கேள்வியாகும். உங்களுக்கு நன்றாகவே தெரியும் கேட்கின்ற துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்று; அதே வேளை சிலபேரின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படவும் செய்கிறது என்று. இங்குதான் நீங்கள் சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும். நீங்கள் கேட்கக் கூடிய அந்த (சாபக் கேடான) பத்துஆவை சில நேரம் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் செய்கிறான்.

அப்படி இருக்க சாபக்கேடான இந்த துஆவால் நாசமானவர்களும் இருக்கலாம், மேலும் அல்லாஹ்வால் இந்த (சாபக்கேடு) பத்துஆ புறக்கணிக்கப்பட்டு நன்றாக இருப்பவர்களும் இருக்கலாம். இந்த சாபக்கேட்டை நாமாகவே கேட்டு பெற்றுக் கொள்வதை விட்டுவிட்டு இனிமேலாவது அல்லாஹ்வும் ரசூலும் கற்றுத்தந்த வழியில் துஆக்களை கேட்டு நன்மையைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்களேன். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

ஆசிரியர் குறிப்பு: அல்லாஹ்விடம் கேட்கும் துஆவின், இறை நினைவு கூர்தலின் (திக்ரின்) வரையறை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் 7:55,205 திட்டமாகக் கூறுகின்றன. அவை வருமாறு:

(முஃமின்களே) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் (துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை (7:55)

(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்கப் பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சத்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை நினைவு கூறுவீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம் (7:205)

துஆவுக்குரிய அல்லாஹ்வின் நிபந்தனை: துஆ பணிவாகக் கேட்கப்பட வேண்டும். பணிவின்றி சப்தமாகக் கேட்பதே முதல் குற்றம்; வரம்பு மீறிய செயல். அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து சென்ற நபிமார்களை இழுத்து இவர்கள் கேட்கும் துஆ நல்ல துஆவாக அல்லாஹ்வால் ஏற்கப்படுவதாக இருந்தால் நிச்சயமாக நபி(ஸல்) அதைக் கற்றுத் தந்திருப்பார்கள். மறைத்திருக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத இந்த துஆ சிறந்த துஆ என்றால், நபி(ஸல்) தனது தூதுத்துவப் பணியை முழுமையாக நிறைவேற்றவில்லை என நபி(ஸல்) மீது குற்றம் சுமத்துகிறார்கள். தனது கண்காணிப்பில் தூதர் இருந்தார் என்று அல்லாஹ் 52:48ல் கூறி இருந்தும் நபியை எச்சரித்து இவர்கள் ஓதும் இந்த துஆவை கற்றுக் கொடுக்கும்படி கட்டளையிடத் தவறிவிட்டான் என்று அல்லாஹ்வையும் குற்றப்படுத்துகிறார்கள். 42:21, 49:16 இறைவாக்குகள் சொல்வது போல் இவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாகி இவர்களாக இந்த துஆவை கற்பனை செய்து அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

எனவே இது தெளிவான பத்துஆ (கெட்ட பிரார்த்தனை) அல்லாமல் துஆ அல்ல.இதை நன்கு அறிந்த நிலையில் மவ்லவிகள்(?) நபி(ஸல்) கற்றுத் தந்த மிக சுருக்கமான மேலான துஆவை அனைவரும் எளிதாக ஓத முடியும் என்பதால், தங்களுக்குக் கை மடக்கு (கூலி) கிடைக்காது என்ற பயத்தினாலேயே மிக நீண்ட இந்த பித்அத் (கெட்ட) பத்துஆவை இறையச்சமின்றி அரங்கேற்றி வருகிறார்கள்.

இறை தியானத்திலும் அல்லாஹ்வின் 7:205 கட்டளையைப் புறக்கணித்து நிராகரித்து விட்டு (2:39) கூட்டாக கும்மாளமிட்டு, சப்தமிட்டுக் கூத்தடிப்பதை திக்ர், இருட்டு திக்ர் என மக்களை ஏமாற்றி வருகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் சாப்பிடுகிறார்கள். மக்கள் பணத்தை ஹராமான வழியில் கொள்ளை அடிக்கிறார்கள்.

Previous post:

Next post: