அள்ளித் தருவீர்!

in 1996 ஜனவரி,தலையங்கம்,பொதுவானவை

  இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிரதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.

இதற்கு படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் 1416 வருடங்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய எளிய போதனா முறையைவிட மேலும் எளியதொரு போதான முறையை உலகிலுள்ள வேறு எந்த அறிஞனும் காட்டித் தரும் தகுதி பெறமாட்டான். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த எளிய மேலும் தெளிவான முறையை விட்டு இந்த புரோகித மவ்லவிகள் முஸ்லிம்களை வேறு வழிகளில் வழி நடத்திச் செல்வதாலேயே இன்று முஸ்லிம் சமுதாயம் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மற்ற சமுதாயங்களால் எட்டி உதைக்கப்படுகிறது.

உலக மக்கள் கொஞ்சம் நிதானாமாகச் சிந்தித்தால் 1416 வருடங்களுக்கு முன், மனிதன் நாகரீகமடையாத அந்தக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி -இஸ்லாம், இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் புத்தம் புதிய நிலை மங்காமல் ஜொலிப்பது, அதாவது அதில் எவ்வித மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக் கொண்டிருப்பது அதிசமன்றோ; அது மட்டுமல்ல, உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும், தெளிவாகவும் இருப்பது பேரதிசயமன்றோ. இதற்குக் காரணம் என்ன? மனிதனால் அல்லது மனிதர்களில் அறிஞர்கள் அடங்கிய ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாக அது அமைந்திருந்தால் அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இஸ்லாம் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) என்ற தனிமனிதராலோ, அல்லது அவர்களும், அவர்களது தோழர்களும் இணைந்த ஒரு குழுவினராலோ அலசி ஆராயப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறித் திட்டம் அல்ல. மாறாக இஸ்லாம் அகில உலகங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்துப் போ´த்துப் பரிபாலித்து வரும் சர்வ சக்தனான சர்வ வல்லமை மிக்க முக்காலமும் உணர்ந்த ஏக இறைவனால், அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அகில உலக மக்களுக்கும் “நிறைவு செய்யப்பட்ட வாழ்க்கை நெறியாகக் கொடுக்கப்பட்டதாகும்.

அந்த வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கை என்று தனது இறுதி மறை அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். (பார்க் 67:2) எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை பணக்காரன், தொழிலாளி -முதலாளி, அதிகாரம் வகிப்பவன் – அதற்குக் கட்டுப்பட்டவன் போன்ற பாகுபாடுகளுடன் நடமாடவிட்டிருப்பது சோதனையின் காரணமாகவே. இவ்வுலகம் இயங்கி சோதனையான பரீட்சை முடிவடைய வேண்டுமென்றால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் அவசியம் என்பதை அறிஞர்கள் மறுக்கமாட்டார்கள்.

கணக்கில் அடங்காத  மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளையுடைய  இவ்வுலக வாழ்க்கையை ஒப்பிட்டு அறியும் உண்மை அறிஞர்களே இந்தஉண்மையை ஏற்க முடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுக்களின் புறக்கணிக்கதக்க நிலையை உணர முடியும். அன்றாடம் சில சில்லறைக் காசுகளை மட்டும் பாரத்து வருபவனுக்கு அதுவே பெரும சொத்தாகத் தெரியும். இதே போல நித்தியமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கையுடையவர்களுக்கே அற்பமான புற்கணிக்கத்தக்க இவ்வுலக வாழ்க்கையில் அற்பமும், கேவலமும் புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து படும் அற்ப இவ்வுலக வாழ்க்கையைவிட பெரியதொரு நிரந்தர வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும். இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டுக் கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும், சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக, புற கண்கள்  குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், புறக்கணிக்க வேண்டிய வாழ்க்கையை உண்மையில் அறிந்து வைத்திருப்பவன். இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் எழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைக்கோல் போரை நாய் காத்துக் கிடந்த கதையாகத்தான் முடியும்; இல்லை; அதைவிட கேடாகவே முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.

இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றைப் பிரிவது மட்டுமல்ல; அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக் காத்துக் கிடந்தற்குரிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.

ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டுக் கொடுக்காததன் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும், வெள்ளியும் உருக்கிக் காய்ச்சப்பட்டு, அவனது நெற்றியிலும், விலாப் புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள சொத்திலிருந்து ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களின் பங்கை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும், அதை முறையாகச் செலுத்தாதவர்களின் நிலை பற்றியும், கீழ் வரும் குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீது நீங்காகக் கடமையாகும். அவையாவன: 2:43, 83, 220. 277,277; 4:77, 162, 55; 7:156: 9:5, 11, 18, 34, 35,60,71,19:31,55; 21:73; 22:41, 78; 27:3; 30:39; 31:4; 33:33; 4:6,7; 58:13; 73:20; 98:5.

இவற்றில் ,
“”இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கெண்டு அவற்றறை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ, (நபியே) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு” என்று நன்மாராயம் கூறுவீராக! (அல்குர்ஆன் 9:34)

(நபியே! அவர்களுகக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிடடுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றியிலும், விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்.( என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 9:35)

ஆகிய இரு கடுமையான எச்சரிக்கைகளையும், உண்மையான முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி, இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட, தங்கள் சொத்துக்களில் நின்றும் ஏழை எளியவர்களுக்குரியதையும், தேவையுடையவர்களுக்குரியதையும் முறையாகக் கணக்கிட்டுக் கொடுத்து விடக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

எனவே அன்பு சகோதர சகோதரிகளே! அல்லாஹ் உங்களுக்களித்துள்ள செல்வங்களிலிருந்து ஏழைகளுக்குரிய பங்கை முறையாகக் கணக்கிட்டு அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். அதையும் கூட்டு முறையில் நிறைவேற்றி சமுதாயத்தில் ஜகாத் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிப்படவும் வழிவகை செய்யுங்கள்.

கடந்த சில வருடங்களாக நமது நாட்டின் செல்வந்தர்களில் சிலர் வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கும் ஜகாத் பணத்தைப் பெற்று உரியவர்களைப் பார்த்து பங்கிட்டுக் கொடுத்து வருகிறோம். பத்து வயதிற்குட்பட் அனாதைகளான ஆண், பெண் குழந்தைகளுக்கும், மிகமிக வறுமையில் வாடும் குழந்தைகளுக்கும், பராமரிக்க யாருமில்லாத மிகவும் வயதான கிழவர், கிழவியருக்கும் பெருநாளைக்கு புத்தாடைகள் வாங்கி வழங்கி வருகிறோம. 10/.ரூபாய் தர்மத்திற்கு 100/.ரூபாய் விளம்பரம் செய்யும் இக்காலத்தில் விளம்பரம் ஏதுமின்றி சம்பந்தப்பட்டவர்கள் ஒரு சிலரின் மேற்பார்வையில் உரியவர்களுக்கு உரியவை போய்ச் சேர ஆவன செய்கிறோம். அல்லாஹ்வின் பொருத்தம் பெறச் செய்கிறோமேயல்லாமல் மக்களின் பாராட்டைப் பெற அல்ல.

ஏற்றத் தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் அமைய அத்தியாவசியமான, எழுதப்படிக்கத் தெரிந்தவர்களிலிருந்து தெரியாதவர்கள் வரை மார்க்கத்தை எளிதாக தெரிந்து கொள்ளும், நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த எளிய போதனா முறை; இந்த போதனா முறை நடைமுறைச் சாத்தியமாக நபி(ஸல்) அவர்கள் யத்ரிபை தீனுடைய நகரமாக மதீனாவாக அமைத்தது போல், ஒரு மாதிரி கிராமம் இவற்றை ஏற்படுத்திட 1985-86களில் திட்டமிட்டு முயற்சித்து வந்தோம். அந்தத்திட்டம் நிறைவேறி விட்டால் தங்களின் புரோகித வர்க்கம் அழிந்து விடும் என்பதை அறிந்த மவ்லவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அவதூறுகள் பல பரப்பி வசதி படைத்தவர்கள் நம்மை நெருங்கா வண்ணம் ஆக்கினர். 1994-ல் இஸ்லாமிய மாநாட்டிலிருந்து மீண்டும் அந்தத் திட்டங்களை செயல்படுத்த அறிவித்த போது, அதே அவதூறுகளைப் பரப்பி மீண்டும் தடுத்து விட்டனர், தங்கள் வலையில் வீழ்ந்து கிடக்கும் சில பணம் படைத்தவர்களின் உதவியோடு தொடர்ந்து காப்பாற்றி வருகின்றனர். பணம் படைத்தவர்களும் விபரம் அறியாமல் தங்கள் பணத்தை அவர்களுக்காக – புரோகிதம் வளர வாரி இறைக்கின்றனர். அல்ஜன்னத் டிசம்பர் 95 பக்க் 16-ல் வெளிவந்துள்ள விளம்பரம் இதற்குத் தக்கதோர் சான்று. புரோகித மவ்லவி வர்க்கததை வளர்த்து அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கயேல்லாமல், மார்க்கக் கல்வியைப் பொதுவுடமையாக்கி அனைவரும் அவற்றை அடைந்து கொள்ள அவர்கள் திட்டம் தீட்டுவதாக இல்லை. அவர்கள் அரபி மொழியைக் கற்று அதில் பாண்டித்யம் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கை நிறைய பணம் ஈட்டட்டும். இதற்கு நாம் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அல்லது அந்த மவ்லவிகளுக்கு அல்ஜன்னத் அறிவிப்பில் கண்டுள்ளபடி உணவு, தங்குமிடம் இலவசமாகக் கொடுத்து, பயிற்சிக் கட்டணமும் வசூலிக்காமல், மாதந்தோரும் அவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்டுள்ள ரூ. 750/- உதவித் தொகையாக அல்லாமல், அவர்களின் உழைப்பின் ஊதியமாக அளித்து, அந்த இரண்டு ஆண்டுகளில் ஏதாவதொரு தொழிற்பயிற்சி அளித்தாலாவாது, அந்த மவ்லவிகள் புரோகிதத்தைவிட்டு, சொந்தக் காலில் நின்று பிரசார பணிபுரிய வழி பிறக்கும்.

ஆனால் இந்த அசலான முயற்சிக்கு புரோகித மவ்லவிகளும் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள்; அவர்களுக்கோ புரோகிதத்தைக் காப்பாற்றி தக்க வைக்கும் அக்கறை. புரோகிதத்தை வளர்க்கத் தங்கள் பணத்தை வாரி இறைக்கும் இந்த செல்வந்தர்களும் நாம் குறிப்பிடும் இந்த முயற்சிக்கு பணம் செலவழிக்க முன்வரமாட்டார்கள். காரணம் புரோகிதத்தை வளர்க்க புரோகிதர்களுக்குச் செலவிடப்படும் பணத்தால் கிடைக்கும் நன்மை, அவர்கள் புரோகிதத்தை விட்டு சொந்தக்காலில் நிற்பதற்கு செலவிடுவதால் கிடைக்காது என்ற மூடநம்பிக்கை அவர்களுக்கு இதை ஷைத்தான் அவர்களுக்கு ஊட்டியுள்ளான். புரோகிதர்களும் இந்த மூடநம்பிக்கையை மேலும் வளர்த்து அவர்களது உள்ளத்தில் புரையோடச் செய்திருக்கிறார்கள். மார்க்கப் பிரசாரம் செய்கிறவர்கள் இமாமத்தில் ஈடுபடுகிறவர்கள் சொந்தமாக தொழில் வியாபாரம் செய்வதை இந்த முஸ்லிம்கள் அருவருப்பதை – வெறுப்பதை நன்கு அறியலாம். இது ஷைத்தானின் தூண்டுதலாலும், புரோகிதர்களின் துர்போதனையாலும் புரையோடியுள்ள மூட நம்பிககையாகும். துறவறத்தை ஆதரிக்கும் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட மதங்களில், துறவிகள் சுயமாக உழைத்துச் சாப்பிடக் கூடாது. மக்களிடம் யாசித்து அதாவது பிச்சை எடுத்து அதனையே உண்ண வேண்டும் என்றதொரு ஐதீகம் இருந்து வருகிறது. இந்த மூட நம்பிக்கையே இஸ்லாத்திலும் நுழைந்துள்ளது. ஆக இந்த மூட நம்பிக்கையால் மார்க்கத்தின் பெயரால் இப்படிச் செய்வதும், செல்வந்தர்கள் தங்கள் ஜகாத், சதக்கா வகைகளை இந்த புரோகித வகைக்கச் செலவிட்டு சமுதாயத்தில் ஆலிம் – அவாம் என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி சமுதாயத்தைக் கூறுபோட்டு வருவதும்தான் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

இவர்கள் நடைமுறைப்படுத்தி வரும் கல்வித் திட்டம நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய கல்வித் திட்டம் என்பதற்கு இவர்களால் குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் தர முடியுமா? நபி(ஸல்) அவர்கள் ஒரு குறிப்பிட்ட சாராரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் மார்க்கம் கற்றுக் கொடுத்ததாக ஆதாரம் இவர்களால் காட்ட முடியுமா? புரோகித மவ்லவிகள் உருவாக்கிய கல்வித் திட்டத்தையே இந்த தவ்ஹீத் மவ்லவிகளும் மேற்கொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களின் இந்தக் கல்வித் திட்டம் அவர்கள் வளர வழிவகுக்குமேயல்லாமல், சமுதாயம் மீண்டும் அதன் உன்னத நிலையை அடைய வழிவகுக்காது.

சமுதாயம் அது இழந்துவிட்ட உன்னத நிலையை, மற்ற சமுதாயங்களுக்கு வழி காட்டும் நிலையை மீண்டும் அடைவதாக இருந்தால், நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திடிக் காட்டிச் சென்ற அதே எளிய போதான முறைதான் பின்பற்றப்பட வேண்டும். ஆயினும் ஷைத்தான் நிச்சயமாக நபி(ஸல்) அவர்களின் போதனா முறைக்கு மாற்றமாகச் செயல்படத்தான் மக்களைத் தூண்டுவான். அவர்களின் உள்ளத்து அபிலாஷைகளும் நபி(ஸல்) அவர்களின் போதனா முறைக்கு மாற்றமாகத்தான் இருக்கும்.
ஆயினும் ஷைத்தானின் மாய வலையிலிருந்து விடுபட்ட ஒரு சில சகோதரர்களின் உள்ளங்களிலாவது நபி(ஸல்) அவர்களது காலத்தைய, எளிய முறையில் மார்க்கக் கல்வி கற்கும் நடைமுறையின் அதாவது போதனா முறையின் அவசியம் உறைக்கத்தான் செய்யும்.

அப்படிப்பட்ட சகோதரர்களாவது முன் வந்து அந்தத் திட்டப்படி ஒரு மாதிரி கிராமம், ஓர் அனாதைகள் விடுதி, ஒரு மஸ்ஜித் மற்றும் இவை சார்ந்த அமைப்புகள் உருவாகிட தங்களின் பொருளாலும், உரிய ஆலோசனைகளாலும் ஒத்துழைப்புத்தரும்படி அன்புடன் வேண்டுகிறோம். சாத்தானிய வழிகளில் இருக்கும் கவர்ச்சிகள் நேர்வழியில் இருக்காது என்பதை மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள் உணர வேண்டும். ஒரு திருமண வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தோரணங்கள், மின் அலங்காரங்கள், ஒலி,ஒளி ஆடம்பரங்கள் இவை நிறைந்த திருமண வீடே சாதாரண மக்களுக்கு திருமண வீடாகத் தெரியும். ஷைத்தானியச் செயல்களான இவை இல்லாத திருமண வீடு திருமண வீடாகத் தெரியாது. ஷைத்தான் இப்படியயாரு மாயத்தோற்றத்தை உண்டாக்கி மக்களை தன் பால் இழுக்கிறான். மக்களில் பெரும்பான்மையினர் அவன் வலையில் சிக்கிச் சீரழிகின்றனர். ஆடம்பரத்தையும், பகட்டையும் விரும்புகின்றனர்.

இதே போல் இன்றைய சாக்கடை அரசியல் நடவடிக்கைகள், பந்த், வன்முறை, அலம்பல் இவற்றால் மக்கள் எளிதில் கவரப்படுகிறார்கள். காரணம் இவை அனைத்தும் ஷைத்தானின் ஆயுதங்களே. இவற்றால் பலன் விளைவது போன்ற தோற்றத்தையும் அவனே உண்டாக்குகிறான். இவை ஏதாவதொன்றில் ஈடுபட்டால் தான் மக்களுக்கு ஏதோ செயல்படுவதாகத் தெரிகிறது. இவை எதிலும் ஈடுபடாமல் குர்ஆன், ஹதீஸை மட்டும் எடுத்துச சொல்லி “முன்மாதிரி நடுநிலைச் சமுதாயத்தை” உருவாக்க முயற்சி செய்யும் எங்களைப் பார்த்து “நீங்கள் என்ன சாதித்து விட்டீர்கள்” என்று கேட்கும் சகோதரர்களே அதிகம். அவர்களைப் பார்த்து பரிடிதாபப்படுகிறோம். மற்றபடி அவர்களைத் திருப்திப் படுத்த அப்படிப்பட்ட ஷைத்தானிய செயல்பாடுகளில் ஈடுபட நாங்கள் தயாராக இல்லை. காரணம் இன்று இவர்களின் அரவணைப்பால் உலக சுகம் கிடைத்தாலும், நாளை அல்லாஹ்வின் தர்பாரில் தலை குனிந்து நிற்க வேண்டி வரும். நம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஷைத்தானும் உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று ஒதுங்கிவிடுவான்.மீளா நரகே பரிசாகக் கிடைக்கும். எனவே அப்படிப்பட்ட முட்டாள்தனமான வீண் முயற்சியில் நாங்கள் ஈடுபடுவதாக இல்லை.

ஆயினும் கவர்ச்சி இல்லாவிட்டாலும் முஸ்லிம்களுக்குரிய “பைத்துல்மால்” அமைப்பை மீண்டும் உயிரூட்டி நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்துள்ளோம். அதன் மூலம் ஏழை, எளிய மற்றும் தேவையுடைய மக்களின் வியாபார, தொழில், வியாபார முன்னேற்றத்திற்கு ஆவன செய்தல் , ஏழை எளிய மாணவ, மாணவியரின் கல்வி மற்றும் அவர்களின் முன்னேற்ற முயற்சிகளுக்கு உதவி புரிதல், பொதுவாக தேவையுடையோரின் தேவைகளை அறிந்து அவை நிறைவேற உரிய நடவடிக்கை எடுத்தல், இவை பரவலாக வளர்ச்சியடையப் பாடுபடுதல், இப்படி பல அத்தியாவசிய காரியங்களைச் செய்ய உறுதி பூண்டுள்ளோம்.

இந்த எங்களின் வேண்டுகோளின் அத்தியாவசியத்தையும்,அவை நியாயமானவை, முறையானவை என்பதையும் உணர்ந்தவர்கள், மேலும் எங்கள் நாணயத்தில் நம்பிக்கையுடையவர்கள் மட்டும் தாராளமாக வாரி வழங்கும்படி உள்ளன்புடன் வேண்டுகிறோம்.இவை பற்றிய வரவு செலவு கணக்குகள் தனியாக முறைப்படி இருக்கும். விரும்புகிறவர்கள் அந்த கணக்கு விபரங்களை கேட்டுப் பெற்றுப் பார்வையிடலாம்.பணம் அனுப்பும் சகோதரர்கள் அது எந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்ற விபரத்தையும் எழுதி அனுப்பினால் அந்த விபரப்படியே செலவிடப்படும்.

அனாதை, ஏழைக் குழந்தைகளுக்கும், மற்றும் பராமரிக்க ஆளில்லாத வயது முதிர்ந்த கிழவன், கிழவிகளுக்கும் பெருநாள் புத்தாடைகள் வழங்க தாராளமாக அனுப்பித்தரவும். ஏழை, எளியவர்கள், தேவையுடையவர்களின் பங்கு அவர்களைப் போய்ச் சேரும் வகையில் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக அனுப்பித்தாருங்கள். தங்கள் தங்கள் பகுதிகளிலுள்ள மேற்கூறப்பட்ட நிலையிலுள்ளவர்களின் பொருளாதார விவரங்கள் அந்தந்த மஹல்லா ஜமாஅத்தின்முன் மொழிதலுடன் அனுப்பித்தர வேண்டுகிறோம். அவர்களில் மிகவும் தகுதியடையவர்களை, சேரும் ஜகாத் நிதிக்கேற்றவாறு தேர்ந்தெடுத்து முறைப்படி கொடுக்கிறோம்.

இன்ஷா அல்லாஹ்

Previous post:

Next post: