ஜனநாயகம் படும் பாடு!

in 2007 நவம்பர்,தலையங்கம்

  நாட்டின் பெரும்பான்மையினர் விரும்பி தேர்ந்தெடுக்கும் ஆட்சியே என பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் ஆட்சியில் அமரும். எவரும்,மக்கள் சொல்வது போல் நாட்டின் பெருன்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. தேர்தலில் பெரும்பாலும் மக்கள் தொகையில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளும் பல வேட்பாளர்களைக் கொண்டு சிதறடிக்கப்படுகிறது. M.L.A., M.P., பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் பெறும் வாக்குகள், அவரை எதிர்த்த மற்ற வேட்பாளர்கள் அனைவரின் வாக்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிகக் குறைவாகவே இருக்கும். இறுதியில் கணக்குப் பார்த்தால் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் இவர் சுமார் 15% வாக்குகளே பெற்றிருப்பார். அந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் இவர் வெறும் 8% வாக்குகளே பெற்றிருப்பார். இவர் எப்படி அந்தத் தொகுதியின் பெருன்பான்மை மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியும்?

ஆக, பெருன்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே நாட்டை ஆளுகிறார்கள் – ஜனநாயக ஆட்சி என்பது வெறும் கேளிக் கூத்தாகவே இருக்கிறது. உண்மையில் நாட்டின் மிகச் சிறுபான்மையினரால் அதாவது வாக்களிக்க உரிமை பெற்றவர்களில் வெறும் 7% அல்லது 8% மக்கள் தேர்ந்தெடுப்பவர்களே ஆட்சியில் அமர்கிறார்கள். ஆட்சியில் அமரும் ஆட்சியாளர்களும் இந்த ஜனநாயக ஆட்சி முறையில் மயங்கி, பெரும்பான்மையினர்களின் மனம் கோணாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கில் நீதியான ஆட்சிக்குப்பதிலாக அநீதியான ஆட்சி நடத்த முற்படுகிறார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு சமீபத்தில் சேது கால்வாய்த் திட்டத்தில் நடுவண் அரசு நடந்து கொண்ட முறையாகும்.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னால் நம் தாய்நாடான இந்திய நாட்டுடன் இலங்கையும் இணைந்து லெமூரியா கண்டம் என்றே அழைக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. கால ஓட்டத்தில் அதில் சில பகுதி நீரில் அமிழ்ந்து இலங்கையும் இந்தியாவும் வேறு வேறு ஆனது. இதற்கும் நமது காலத்தில் இப்பகுதியிலுள்ள தனுஷ்கோடி நிலப்பகுதி நீரில் அமிழ்ந்து காணாமல் போனது பெரியதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

மனித குலத்தின் ஆதித் தந்தையை கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஓரிறைவனின் அறிவிப்புப்படி இறக்கப்பட்டு வாழ்ந்த பகுதியும் இதுவென்றே கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீரில் அமிழ்ந்த பகுதி ஆதம் பாலம் (Adam’s Bridge) என்றே நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வருகிறது. நியாயப்படி கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அந்த ஆதம் பாலத்தைக் காக்க முன்நின்று போராட வேண்டும். ஆனால் அவர்களோ நாட்டின் நலன் கருதி, அதாவது கப்பல் போக்கு வரத்துக்கு சேது கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்ற நோக்கில் அதற்கு துணை நிற்கிறார்கள். ஆதத்தைப் பற்றி இறைவனின் இறுதி வழிகாட்டல்நூல் அல்குர்ஆனில் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராமர் என்பவர் புராண காவியங்களில் கூறப்பட்ட ஒருவராக இருக்கிறாரே அல்லாமல் ஹிந்துக்களின் வேதங்களில் காணப்படும் ஒரு பெயரும் அல்ல. ஹிந்து வேதங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால் ஆதம் என்ற பெயர் கிடைத்தாலும் ராமர் என்ற பெயர் கிடைப்பது அரிது. மேலும் ராமர் பாலம் என்று கட்டப்பட்டதற்கு எந்தவித வரலாற்று ஆதாரமும் இல்லை. இந்த உண்மையைத்தான் நடுவண் அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

ஆனால் இதை மறுத்து இந்தியாவின் பெருன்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு மாற்றமான அறிக்கை இது என பா.ஜ.க. போன்ற அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகள் மக்களிடையே செய்தி பரப்பிய உடனேயே நடுவண் அரசு உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பித்த ராமர் பாலம் பற்றிய உண்மை அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதாவது அந்த அறிக்கை நூற்றுக்கு நூறு உண்மையாக இருந்தும், பெருன்பான்மை மக்களின் ஓட்டு வங்கி கிடைக்காமல் போய்விடும் என அஞ்சி நடுவண் அரசு அந்த உண்மையைான அறிக்கையை திரும்பக் பெற்றுக் கொண்டது. இப்படி ஜனநாயக நாட்டில் பெருன்பான்மை மக்களை திருப்திப்படுத்த பல அநியாயங்கள், அக்கிரமங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. நமது நாட்டில் வன்முறைச் செயல்கள், தீவிரவாதம், குண்டு வெடிப்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புற்றீசல் போல் வளர்ந்து வருவதற்கு முக்கிய காரணம், மத்திய, மாநில அரசுகள் பெருன்பான்மையினரை திருப்திப்படுத்தும் நோக்கில் புலன் விசாரனைகளை நடத்துகின்றனவே அல்லாமல், நடுநிலையோடு உண்மையைக் கண்டறியும் நோக்கில் புலன் விசாரணைகளை நடத்துவதில்லை. இதற்கு அடிப்படைக்காரணம் இந்த தவறான ஜனநாயக ஆட்சி முறையே தான். அதாவது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடப்பதால், ஆதிக்க சக்திகளுக்கு சாதகமான ஆட்சியே நடைபெறுகிறது. அனைத்து மக்களையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வரும் அனைத்து மக்களின் ஒரே இறைவனின் வழிகாட்டலின்படியுள்ள ஆட்சி நடை பெற்றால் மட்டுமே நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், சுபீட்சம் ஏற்பட வழி பிறக்கும்.

அந்நஜாத்: நவம்பர், 2007

Previous post:

Next post: