பிரிவுகளால் நாசம் நமக்கே…? அல்லாஹ்வை அஞ்சுவோம்…!

in 2011 பிப்ரவரி

சேலம் S.A.H.அலீ, M.A.,M.Phil.,M.Ed.,

1. அல்லாஹ்வின் நியதியும் அதிசயங்களும்
வைரஸ், பாக்டீரியா, ஈஸ்டு போன்ற நுண் உயிரினம் ஒன்று, இரண்டாக, நான்காக, எட்டாக பிளந்து பெருகுவது, மனித தாவர விலங்குகளின் நன்மை தீமையை நாடி அல்லாஹ் அனுமதிக்கும் உயிரியல் நியதி. (Biological Nature).

ஆண், பெண் பேதம் அறிய முடியாத மண் புழு, கடல் குதிரை போன்ற இனங்கள் இனப் பெருக்க காலத்தில் ஒன்று ஆணாக மற்றொன்று பெண்ணாக செயல்படும். நீர்நிலை பக்கம் வளரும் ட்ராசிரா (Tracera) பட்டர்வாரெட் (Butterwaret) போன்ற 675 வகை செடிகள் ஈ போன்ற பூச்சிகளை உண்ணும் வகை தாவரங்கள். இப்படி அல்லாஹ்வின் படைப்பில் அதிசயங்கள் ஏராளம்.

அல்லாஹ்வின் அருட்கொடைகள்:
உழும் நிலங்கள், வீடு, அடுக்கு மாடிகளாக மாறுகிறது. நிலம் வேண்டாம். சிறிய நிலம் அதில் பல அடுக்கு மாடிகளில் ஹைட்ரோ போனிக்ஸ்  (Hydro Phonix) ஏரோபோனிக்ஸ் (Aero Phonix)  முறையில், மண்ணில்லாமல் நீரில், காற்றில் மிதக்க, வளரும் செடிகளில் அதிக மகசூலில் தக்காளி, உருளைக் கிழங்கு, வெள்ளரி, மிளகு போன்ற காய்கறி வகைகளை மனித அறிவு உற்பத்தி செய்கிறது. அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அபரித மூளைத் திறமைகளில் இப்படி பல அருட்கொடைகள் .

அல்லாஹ்வுக்காக ஒன்றுபட்டோம்:
ஆனால் மார்க்க விசயத்தில் மத்ஹபு, தரீக்கா, இஜ்மா, கியாஸ், தர்கா என இணைவைப்பில் சீரழிந்து பின் ஸலபி, வஹ்ஹாபி, அஹ்லே ஹதீஸ் என எதிர்த்து நின்று 1986களில் சிறப்பாக தமிழக மண்ணில் ஓரணியில் தூய இஸ்லாத்தை, தூய குர்ஆன், ஹதீஸ் ஒளியில், தக்லீது செய்யும் முகல்லிதுகளாக (Blind followers) இல்லாமல் பின்பற்றி கடுமையான எதிர்ப்புகள் சக முஸ்லிம் சகோதரர்களால் பல முனைகளில் உருவானபோதும், அல்லாஹ்வின் உதவியால் எதிர்கொண்டு ஒன்று பட்டவர்கள் நாம்.

அல்லாஹ்வை அலட்சியமாக்கி சிதைகிறோம்:
இன்று நபி(ஸல்) முன்னறிவித்த 73 கூட்டங்களை மெய்ப்படுத்த தூய்மை கெட்டு, சொத்து சுகங்களால் சுயநல பித்தர்களாகி IAC, SALAFI, JAQH, TNTJ, INTJ, PFI, TMMK, MMK, SDPI என பல துண்டுகளாக சிதைந்து நரக வாசல் வரை சைத்தானுக்கு தோழராகி நம்மில் பகைமை பாராட்டி விரைவது, அல்லாஹ்வின் ஆளுமை யில் நம்பிக்கையால் நாம் நாசமாக இருக்கலாம். அஞ்சவேண்டிய முறையில் அல்லாஹ்வை அஞ்சுவோம். அலட்சியமாக(6:31, 16:108, 21:03) இருக்கக் கூடாது. காரணம் அல்லாஹ் அலட்சியமாக(27:93) இல்லை.

ஸாலிஹீன்கள் தியாகம் கதைகளா?
நாம் அனைவரும் மத, இன, குல, நிற, பண, மன பேதமின்றி வாழ ஓரிறை அடிமைகளாக வாழ படைக்கப்பட்ட மாசற்ற மனித இனம். சைத்தானின் ஊசாட்டத்திற்கு 7:20, 20:120, 114:4,5 வசனங்கள்படி அல்லாஹ்வின் நாட்டப்படி உட்பட்ட இனம். ஒரே நெறிநூல் அல்குர் ஆன், வழிகாட்டி நபி(ஸல்). இந்த இரண்டு தெளிவான வழிகாட்டிகளான அல்லாஹ்வின் நெறிநூல் அல்குர்ஆன், நபிவழி அல்ஹதீஸ் தவிர சிலை, கபுரு, தனி மனித இணைவைப்புகளை விட்டு, மெளட்டீக மூட நம்பிக்கைகளை விட்டு வெளியேறி, சுகங்களை இழந்த, துக்கங்கள் பல சகித்த சுமையா, பிலால், குபைப், ஹம்ஸா, கப்பாப், அம்மார், காலீத் பின்வலீத், அபூஜந்தல், தல்ஹா, ஜைத், ஜாஃபர், முஸ்அப் (ரலியல்லாஹு அன்ஹுமா) என நீளும் பெயர்ப்பட்டியலைச் சேர்ந்த உன்னத ஸாலிஹீன்களின் வழி செல்பவர்கள் நாம். இவர்க ளின் தியாகம் இறை அச்சம் என்ன வெறும் கதைகளா? சிந்திக்க வேண்டும்.

நாம் சுயநல பைத்தியமானோம்.
நிச்சயமாக நாமே பூமி அதன் மீதுள்ளவற்றின் வாரிசாவோம். அவர்கள் (யாவரும்) நம்மிடமே மீட்கப்பட்டு கொண்டுவரப் படுவார்கள் (19:40) என்ற எச்சரிக்கை மறந்து பல்வேறு பெயர்களில், பணம், பதவி, பகட்டு, மீடியா பிரபலங்களாக (Media focus and familiarity)  ஆசைப்பட்டு தலைவர்களாக, தர்மவான்களாக, அறிவுச்சுடர்களாக, பல பிரிவுகளாக மனம் மயங்கி வாழ்கிறோம். அல்லாஹ்வின் தெளிவான ஆதாரங்களை, கடுமையான எச்சரிக்கையும் மீறி மறந்தும் (3:105) ஸாலிஹீன்களின் தியாக உணர்வு மறந்தும் போலி மதிப்புகளுக்கு அலைகிறோம்.

இதனால் 30:32 வசனப்படி பிரிவுகளால் மகிழும் மனம் 30:33 வசனப்படி சங்கடங்களால் அல்லாஹ்வின் பால் திரும்புவதும், அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைத்தவுடன் (நவீன) இணை வைப்பில் மயங்கும் நிலையடைகிறது. இன்று குர்ஆன் வசனங்களை ஹதீஸ்களை சுயலாபங்களுக்காக சுற்றிவளைத்து திரித்து, தறிகெடும் சுயநல பைத்தியங்களாகிவிட்டோம்.

அல்லாஹ்வின் நற்சான்று மட்டுமே நம் லட்சியம்.
மரணம் நிச்சய முடிவு. கேள்விக் கணக்கு அவனிடம் கடுமையானது (21:47, 22:17, 28:41) இங்கும் அங்கும் கண்ணியமளிப்பவன் அல்லாஹ். எல்லா சுகங்களுடன் தன்னை பயந்து வாழ்ந்த பயபக்தியுடையவர்களுக்கு சுவனம் பரிசாக தருபவன் (2:25,82) அல்லாஹ்! எனவே, அவனது சோதனைகள் வறுமை, பிணி, அலைக்கழிப்புகளை பொறுத்துக் கொண்டு, ஒழுக்க சீரழிவுகளை விட்டும் தப்பித்து (2:214,221) வாழ்வோம். 3:14 வசனப்படி சொத்து சுக இச்சைகளுக்கு மயங்காமல் 8:28 வசனப்படி நமது செல்வம், சந்ததிகள் நமக்கு சோதனைப் பொருள்களே. அல்லாஹ்விடமே கூலி பெற நிறைய (அருட்கொடைகள்) உள்ளன என உணர்வோம். 3:15 வசனப்படி அல்லாஹ்வின் பொருத்தமே குறிக்கோளாக, நம்மை உற்றுநோக்கும் அல்லாஹ்வையே அஞ்சியவர்களாக அல்லாஹ்வின் நற்சான்றுக்கான தகுதியாளர்களாவோம்.

உண்மையாளராவோம்! மன்றாடுவோம்!
முஸ்லிமான அனைத்து இயக்கவாதிகளும் நபி வழி பேணி ஓரிறையான அல்லாஹ்வை தொழுகிறோம். பர்லு, சுன்னத், நபில், தஹஜ்ஜுத் தொழுது பேண பலர் துடிக்கிறோம். தத்தமது முறைகளால், சுய குழப்பங்களால் தடுமாறி நோன்பு, பெருநாட்களின் காலங்களில் 6:32, 6:70, 29:64, 47:36 வசனங்களில் அல்லாஹ் குறிப்பிட்டபடி மார்க்கத்தை வீண் விளையாட்டு வேடிக்கையாக்கி நமது மார்க்க வழியை பிரித்து சிதைத்து நபி(ஸல்) அவர் களின் வழியை பின்பற்றுவதாக சொல்லி சிதைக்கிறோம். 3:16,17 வசனப்படி தூய இறையச் சத்துடன் அல்லாஹ்வின் மன்னிப்புடன், நரக விடுதலையுடன், மேலான சுவனம் பெற அல்லாஹ் வாழ்த்தும் உண்மையாளராவோம்.

அல்லாஹ்வை முற்றிலும் அடிபணிந்த சமுதாயம் நாம். தன் சந்ததிகள், மூத்தோர்கள், மரணித்தவர்கள், கியாமத் வரை வரும் பின் தோன்றல்கள் (முஸ்லிம்களாக, வாழ்ந்து, மரணித்து, கூட்டம் கூட்டமாக) சுவனம் செல்ல அருகதையுடையவர்களாக அல்லாஹ்விடம் நபி இப்ராஹீம்(அலை) வழியில் 2:128 வசனப்படி மன்றாடுபவர்கள் நாம். அவனையே தூய மனதுடன் வழிபட வழிகளை வழங்கப்பட்டவர்கள் நாம். அவனுடைய அளவிலா அன்பிற்குட்பட்டு, அவன் பாவ மன்னிப்போடு மரணிக்க வேண்டும்.

இன்று மெய் பொய்யான பொய் மெய்யான நிலை!
இத்தகைய நற்பண்புகளுக்கு மாறாக ஷைத்தானின் தோழர்களாக அநேக மனிதர்கள் வாழும் காலம் இது. தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் தைலானின் முதிர் கன்னி. ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை ஆண் ஒன்று பெண் மற்றொன்று. தந்தை வேறு வேறு என மருத்துவ ரீதியாக தன் காமப் பசியை மகிழ்ந்து நிரூபிக்கும் போலந்து நாட்டுப் பெண், தற்கொலையா, கொலையா இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என துணிந்து பதிவு செய்து காட்டும் மிருகங்கள். மகளைக்கொன்று இதயம் அறுத்து எடுத்து கடவுளுக்கு படைக்கும் கொலைகார தாய். லூத் நபி(அலை) காலத்தில் அழிக்கப்பட்ட ஓரின வாழ்க்கைக்கு இன்று அங்கீகாரம். வாடகை தாய் மூலம் அந்த அசிங்கங்கள் சந்ததி பெற்றுக் கொண்டதை கட்டம் போட்டுக் காட்டும் பிரபல நாளிதழ். இப்படி கணக்கில்லாமல் நீளும் அசிங்கங்கள்.

ஆனால் பர்தாவுக்கு தடைபோடும் பிரான்ஸ், ஸ்பெயின். பாங்கோசைக்கு தடைபோடும் சுவிஸ், டென்மார்க். வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் தகுதியான பிரான்ஸ் முஸ்லிம் இளவல்கள். முஸ்லிம் பெயர்களா-விமானம், ரெயில் பதிவுகளில் இன்னும் பயணங்களின்போது சந்திக்கும் அவமானங்கள் என தீவிரவாதப் போர்வையில் தூய மார்க்கத்தைக் கொண்ட நாம் துச்சமாகி விட்டோம்.

இன்று அசிங்கப்பட்டுள்ள மெய்யாகத் தெரியும் பொய்கள் அழியவும், பொய்யாகத் தெரியும் மெய்யான தூய மார்க்கமான இஸ்லாம் நமது வாழ்வியல் பண்பு, பயிற்சி, ஒழுக்கங்களால் இந்த முழு உலகையும் கழுவி தூய்மையாக்க, பிரிந்துள்ள நாம் ஒன்றுபட்டு, நரக விளிம்பிலிருந்து விடுபட்டு 3:103 வசனப்படி அல்லாஹ்வின் அருட்கொடைகளை, உதவியை, பாதுகாப்பை, பெற்றவர்களாக தோளோடு தோள் நின்று 13:22 வசனப்படி நன்மையை ஏவி மேற்குறிப்பிட்ட பல வித தீமைகளை தடுக்க கலப்பற்ற களப் பணியாற்ற வேண்டும்.

தலைவர்களே பொறுப்பு:
இயக்கங்களின் வார, மாத இதழ்கள் தூய மார்க்கம் குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களுடன் ஸஹாபாக்களின் தியாக வாழ்வு ஆதாரங்களுடன் சமூக பிளவுகளை பிணைப்பதை மறந்தன. இன்று சண்டைகள், மறு விளக்கங்கள், கண்டனங்கள், கூட்டம் சேர்க்க போட்டோ காட்சிகள், பித்ரா, சதகா, குர்பானி மற்ற பண வசூல், சொத்து சேர்ப்பு, சண்டை, கோர்ட் வில்லங்க விபரங்களின் பதிவுகளாகவும் வர்த்தக விளம்பர (Business & Advertisement) இதழ்களான பரிதாபம். நல உதவிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், இரத்த தானங்கள் யார் யாரோ பாராட்டுவதை பெருமையாக காட்டி, நம்மிடை சண்டைகளை அணுகுண்டு பிளவு போல நீட்டிக் காட்டும் வேதனைகள். ஒவ்வொரு முஸ்லிமும் அர்ப் பணிப்பாளன் தான்.

உலக பெருமைக்கோ, இயக்க பெருமைக்கோ, தனி மனித தலைவனுக்கோ அவன் சமூகப் பணியாற்றி 30:32 வசன எச்சரிக்கை மறந்து வாழ தலைவர்கள் காரணமாகி விடக்கூடாது.

அல்லாஹ்வே எல்லா நிலையிலும் நம் பாதுகாவலன்:
அரசியல், சினிமா, இன, குல தலைவர்கள், நடிக, நடிகையர்கள் பின்னால், நரக வாழ்வு தேடி சீரழியும் சக சகோதர மனித இனம் ஒரு பக்கம். அவர்களின் சொல் செயல்களை ரசித்து அங்கீகரிக்கும் கூட்டம் மறுபக்கம். இவர்களுக்கு தூய வாழ்வு தெரியாது, தெரிந்தாலும் சைத்தான் 20:120, 114:4,5 வசனப்படி தடுக்கலாம். ஆனால் மில்லத்கள், மார்க்க மேதைகள், சேவகர்கள், லீக், மமக, ததஜ, இதஜ பேனர்களுடன் மறைமுகமாகவோ, நேரடியாகவோ, நயவஞ்சக ஓநாய், பசுத்தோல் போர்த்திய புலிகள் பின்னால், உள்ளாட்சி மாநில பாராளுமன்ற வாய்ப்புகளுக்காக, எலும்புக்காக நாக்கை நீட்டும் நாய்களாக, சமூகத்தை அடகு வைத்து, நானிலம் போற்றும் நபி(ஸல்) வழி மறந்து, யாரையோ நானிலம் போற்றும் நாயகராக்கும் அழகே அழகுதான். இதுதான் மார்க்கப் பணி!

இனவெறி, மதவெறி தாக்குதல்களால் சிதைக்கப்படும் சமூகம், வழிபாட்டு இல்லம், உரிமைகள், தனி முஸ்லிம் சுதந்திரம், சந்தேகப் பார்வை, கேவலங்களால், தீவிரவாத செயற்கை முத்திரைகளால் தினம் செத்து சருகுகளாகி, நிவாரணமோ, விடுதலையோ, களங்கம் துடைப்போ இல்லாமல், அல்லாஹ்வின் உதவி கிடைக்காதா என (2:214) நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் ஏங்கிட அலைக்கழிக்கப் பட்டது போல இல்லாவிட்டாலும், எங்கெங்கோ மூலைமுடுக்கில் அழும் இளவல்கள், மூத்தோர்கள், குடும்பங்கள் சமூக உழைப்பாளி கள் ஆகிய இவர்களுக்கு 66:02 வசனப்படி அல்லாஹ்வே பாதுகாவலன்.

இந்த பிளவுகள் அல்லாஹ்வுக்காக பிணைப்புகளாக 3:101,102,103, 22:78 வசனங்களின்படி அல்லாஹ்வின் பாதுகாப்பு மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பதவி சுகபோகங்களை மறுமை வெற்றிக்காக மாற்றினால் உள்ளாட்சி, நகராட்சி M.L.A., M.P. பதவிகள் முஸ்லிம்களின் காலடியில் கிடக்கும். சமூக மாற்றங்களுடன் நாட்டில் மார்க்க சகோதரர்களின் சட்ட, பொருளாதார, நிவாரண தீர்வுகள், சுயநலம் பார்க்காத, சுகபோக நாட்டான்மைகளாக இல்லாத இறையச்ச ஜனநாயக பொறுப்பாளர் களால், சட்ட நாடாளுமன்றங்களில் தீர்வு காண, அல்லாஹ் உதவலாம். பிச்சை கேட்கும், சமூகத்தை அடகுவைக்கும் நிலை மாறலாம். உண்மையான பாதுகாவலன், எதிரிகளை அறிபவன், நல்ல உதவியாளன், நெறிநூலால் வழி காட்டுபவன் என 2:257, 3:150, 4:45, 7:30,196 வசனங்களின்படி மார்க்க சகோதரர்கள் முற்றிலும் அல்லாஹ்வையே சார்ந்து, நன்றியுள்ள அவன் அடியார்களாக ஒருவர் மற்றவரின் உதவியாளர்களாக, சகோதரர்களாக 49:10 வசனப்படி மனித சமுதாய உண்மை வழிகாட்டிகளாகலாம்.

குரோதம் மறப்போம் அவன் தண்டனைக்கு அஞ்சுவோம்!
சத்திய மார்க்கமான இஸ்லாத்தில் பிறந்த சில முஸ்லிம் பெயர்தாங்கிகள், தொழுகை, நோன்பு மறந்து வசதியிருந்தும் ஜகாத், ஹஜ் அமல்களை மறந்து மார்க்க பெருநாட்களை விட மாற்றார் பண்டிகைகளை சிறப்பாக அனுபவித்து முனாபிக் (நயவஞ்சக) வாழ்க்கையில், வசனம் 11:67,68,82, 95,100, 6:45 என ஏராளமான அல்லாஹ்வின் நெறிநூல் கூறும் மனித முன்னோடிகளான நூஹ் (நபி), ஆத், ஸமூத், மத்யன் மூஸா(அலை) சமுதாயங்களின் அழிவுகள், இன்னும் கூறாத பல சமுதாய அழிவுகள் பற்றி அறியாதவர்களாக திடு மென வரும் அடுத்த அழிவுகள் பற்றி அச்சமில்லாமல் சம முஸ்லிம் சகோதரனை, தூய மார்க்கத்தை சொல்வதால் புறக்கணித்து, மற்றவர்களை உற்ற தோழர்களாக, உதவியாளர்களாக, வழிகாட்டிகளாக கொண்டு வசனம் 29:22 இன்ன பிற வசனங்களில் அல்லாஹ் கூறும் அவனது பாது காப்பே, உதவியே உண்மையானது. யாரும் அவனை இயலாமலாக்க முடியாது என்பதை மறந்து 29:64 வசனம் கூறும் மறுமை மறந்த வீண் விளையாட்டு வேடிக்கைகளில் அழிந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த முஸ்லிம் சமுதாயம் 73 கூட்டமாக பிரியலாம்; களங்கப்பட்ட மார்க்கம் நம்மி டையே உலவலாம். நரகத்தின்பால் அழைப்பு விடுக்கப்படலாம். ஜமாத்துல் முஸ்லிமீன் எது? யார் அதன் இமாம் என ஒற்றுமையை தவிர்த்து ஷைத்தானின் பின்னால் இந்த சமுதாயம் ஹுதைபத்துல் யமான்(ரழி) அறிவித்த புகாரி, முஸ்லிம் என பதிவுகளில் உள்ள ஹதீஸ் எச்சரிக்கையையும் மீறி ஓடலாம். அதனால் அழிவு தக்லீது செய்து முஸ்லிமான நம்மில் ஒவ்வொருவருக்கும் தான். 54:30,31, 38,39,40 என பல எச்சரிக்கையூட்டும் இறை வசனங்களை, இதில் நல்லுணர்வு பெறவும், தண்டனை களிலிருந்தும் தப்பிக்கவும் அல்லாஹ் வழி காட்டுகிறான்.

இன்றைய பதவி, பட்டம், பதக்கம், சொத்துக்கள், பைலாக்கள், கண்ணாடி போல உடையும் முஸ்லிம் சமூக உறவுகள், எனக்குப்பின் என் உறவும் சந்ததியும் இயக்கப் பொறுப்புக்குத் தக்கவர்கள் என்ற குறுகிய குணம், மற்ற சமூகங்களைப் போலவே பணம் ஆள் பலங்களை நம்பி சமூகத்தை சிதைக்கும் போக்கை பின்பற்றி இயக்க பொறுப்பாளர்கள், தம் மோடு வழிகெட்ட சகோதரர்களோடு, வசனம் 7:45, 51படி மார்க்கத்தை கோணலாக்கி, உலக மாயையில் மூழ்கியவர்களாக 7:38 வசனப்படி ஒருவரை ஒருவர் மறுமை வேதனையை பெற்றுத்தர அல்லாஹ்விடம் கேட்பவர்களாக வீணாகிவிட வேண்டாம். ஆனால் 7:42,43 வசனப்படி சுவனவாசிகளாக, இங்கே குரோதம் குழப்பம் மறந்து ஒருவர் மற்றவரை மன்னித்தவர்களாக மறுமையிலும் அல்லாஹ் வாழ்த்தும் வாழ்த்துக்களுடன் அவனை நன்றியுடன் புகழ்ந்தவர்களாக, மறுமையில் சுவனத்தில் ஒன்று படுமுன் இங்கு ஒன்றுபடுவோமாக!

Previous post:

Next post: