ஏமாற்றாதீர்கள்! ஏமாறாதீர்கள்!!

in 1989 நவம்பர்

     முஹிப்புல் இஸ்லாம்

    “எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்கு கிரயமாக சொற்பத்தைப் பெற்றுக் கொள்கிறார்களோ! நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. கியாம நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களுக்கு மிகக் கடுமையான வேதனையுண்டு.”  (2:174)

    ஓ! என்னரும் முஸ்லிம் பொது மக்களே! தமிழகத்தில் ஆலிம்கள் நம் உயிருணுமினிய இஸ்லாமிய மார்க்கத்தால் நடத்தி வரும் மோசடிகளையும், மோசடிப் பிரசாரத்தையும் “அந்நஜாத்” துணிவுடன் தூகிலுரித்துக் காட்டி வருகிறது. இதுவரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் யாருமே செய்ய முயலாத அசாதாரண முயற்சி! என்றாலும் ஆலிம்களின் மாயப்பிடியிலிருந்து மீட்சிப் பெற முஸ்லிம் பொதுமக்கள் இன்னும் முயலவில்லையே…! ஏன்…? ஏன்..? (ஆலிம்களின் கூற்றுக்களை அப்படியே மார்க்கமாய் மதிப்பதன் விளைவு தான்.) காரணம் என்ன?

    ஆலிம்கள் உங்களுக்கு எதை மார்க்கமாய் போதிக்கிறார்கள்? சற்று சிந்தியுங்கள். அவர்கள் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்காக மார்க்கத்திற்க்கெதிரானவையெல்லாம் மார்க்கமாய் போதிக்கின்றார்கள். அவைகளை இன்னமும் நீங்கள் உணராமல் இருக்கின்றீர்கள். நாங்கள் தன்னிச்சையாக ஆலிம்கள் விமர்சிப்பதாய் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்(ஜல்) வின் கூற்றை கூர்ந்து கவனியுங்கள்.

    * “ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக பண்டிதர்களிலும், குருக்களிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுக்கிறார்கள்”.

    * மனிதர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் அறிவில்லாமல் வீணானவற்றை விலைக்கு வாங்கி, அவற்றால் மக்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், பரிகாசமாக்கிக் கொள்ளவும் முயல்கிறார்கள். இத்தைகையோருக்கு மகத்தான வேதனையுண்டு”.                         (31:6)

    ஆலிம்கள் தங்கள் வயிறுப் பிழைப்புக்காக மார்க்கத்தின் பெயரால் செய்துவரும் மோசடிகளை அந்நஜாத் எடுத்துக்காட்டி வருவதை அந்நஜாத்தை காய்தல் உவத்தலின்றி படித்து வருவோர் நன்கறிவர் ஆலிம்களுக்கு வருமானம் தேடித்தரும் சில சடங்கு சம்பிரதாயங்கள், கீழேப் பட்டியலிடப்படுகிறது.

    * மவ்லிதுகள் – இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முதல் பல்வேறு வலிமார்கள் பெயரால் ஓதப்படும் மவ்லிதுகள்.

    இறந்தவர்கள் பெயரால் 3ம் ஃபாத்திஹா, 7ம் ஃபாத்திஹா, 40 ம் நாள் பாத்திஹா, 6-ம் வருடப் பாத்திஹா என்று வருடம்  தோறும் தொடரும் ஃபாத்திஹாக்கள் மற்றும் இறந்தவர்கள் பெயரால் நிகழ்த்தப்படும் அத்தனைச் சடங்கு சம்பிரதாயங்களும் ஃபீஸ்!

    * மீலாத் மாநாடுகளில் உரையாற்றுவதற்கும், மார்க்கச் சிறப்பு சொற்ளபொழிவுகளும் ஃபீஸ்! (இதில் ஆலிம்களின் வழியை அப்படியேப் பின்பற்றி ஆலிம்களல்லாதோரும் ஃபீஸ் வாங்குதல்).

    * திருமண விழாவிற்காகப் போடப்படும் பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சிக்கு ஃபாத்திஹா ஓதிவிட்டு ஃபீஸ் வாங்குதல், மணமகனுக்கு மாலைச்சூட்டியவுடன் ஓதப்படும் பாத்திஹாவுக்கு ஃபீஸ்! நகர்வலம் பள்ளிவாசல் வந்தடைந்ததும் பள்ளியை முன்னோக்கி ஃபாத்திஹா ஓத ஃபீஸ்! இன்னும் ஊர்தோறும் மாறிக் கொண்டிருக்கும் புதுப் புது திருமணச் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் ஃபீஸ்!

    * சந்தனக்கூடு கூடாதென்று காரசாரமாய் பேசிவிட்டு – தாரைத்தப்பட்டை, பேண்ட் வாத்தியங்கள், வான வேடிக்கை, கரக ஆட்டம், மயில் டான்ஸ், பொய்க்கால் குதிரை, இத்தியாதி… இத்தியாதிகளோடு வலம் வரும் சந்தணக் கூடு பள்ளிவாசல் முன் நிற்கையில் அதற்கு துஆ ஓதி ஃபீஸ் பெறுதல்!

    * புதுவீடு புகுதல், சுன்னத்(சுத்னா) வைபவம்! காதணி அணிவிக்கும் வைபவம்! இதுப் போன்ற நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஃபீஸ் பெறுதல்!

    * பில்லி -சூன்யம் -தாயத்து -தட்டு -நூல் முடிதல் -தகடு தயாரித்தல் -பால் கிதாபு பார்த்தல் -பேய் ஓட்டுதல், அப்பப்பா…! இன்னும் எத்தனை எத்தனையோ….! அத்தனைக்கும் பீஸ்!

    மனை முகூர்த்தம் -மாற்றுமத சடங்குகளைப் போல் ஃபாத்திஹா முலாம் பூசி அதற்கும் ஃபீஸ்!

    இப்படியே பட்டியல் நீண்டு செல்லும். சேம்பிலுக்கு சிலவைகள் மட்டும் மேலேச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதற்க்கெல்லாம் முக்கியக் காரணம் முஸ்லிம் பொதுமக்களின் அறியாமையே! முஸ்லிம் பொதுமக்களின் அறியாமைத்தான் -ஆலிம்களின் மிகப் பெரிய மூலதனம்! அது மட்டுமல்ல, மூட நம்பிக்கைகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் மூதாதையர்கள் வழக்கங்களிலும் முஸ்லிம் பொதுமக்களுக்கிருக்கும் குருட்டு பக்தியுங் கூட. ஓ! என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இப்போது சிந்தியுங்கள். ஒருசில ரூபாய்களுக்கு வாங்கும் மட்பாண்டம் விஷயத்தில் கூட ஏமாறக் கூடாது என்று அவைகளைக் கொட்டிப் பார்த்துத் தட்டிப் பார்த்து மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் வாங்கும் நீங்கள் -மார்க்க விஷயத்தில் மட்டும் நீங்கள் கோட்டை விட்டு விடுகிறீர்கள். எளிதில் ஏமாந்து விடுகிறீர்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் மார்க்க ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுபவைகள் அனைத்தும் (என்று கூறாவிட்டாலும் மிகப்பெரும் பான்மையானவைகள்)  சடங்கு சம்பிரதாயங்களே! சடங்கு சம்பிரதாயங்கள், மூட வழக்கங்கள் அனைத்தும் ஆலிம்களின் அங்கீகாரத்துடன் ஆலிம்களாலேயே அரங்கேற்றப்படுகிறது.  மார்க்கத்திற்கு முற்றிலும் முரணான – இறைவனுக்கு இணையா(ஷிர்க்கா)கும். குற்றத்திற்க்கிட்டுச் செல்லக் கூடிய இறை நிராகரி(குப்ர்)ப்பிற்க்கிட்டுச் செல்லக்கூடிய இறைமார்க்கம் இஸ்லாத்தின் அடித்தளங்களையே (குர்ஆன் – ஹதீது) தகர்த்தெறியக் கூடிய அனாச்சாரங்(பித் அத்)கள், மற்றும் மாற்று மதத்தவரின் சடங்கு சம்பிரதாயங்கள் சிற்சில மாறுதல்களுடன் மாற்றப்பட்ட நிலையில் மார்க்கமாய் மதிக்கப்படுகிறது.

   சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் வயிறு வளர்ப்பவர்கள் ஆலிம்களாயிருந்தாலும் சரி, ஆலிம்களல்லாதவர்களாயிருந்தாலும் சரி, எல்லோரையும் குறிப்பாக புரோகிதத்தைத் தொழிலாய்க் கொண்டவர்களை மேற்காணும் இறைவாக்கு எச்சரிக்கிறது. இந்தப் புரோகிதத்துக்கு உறுதுணையாக இருக்கும் முஸ்லிம் பொதுமக்களே! சிந்தியுங்கள். முஸ்லிம் பொதுமக்களின் அனுசரனையே புரோகிதம் நின்று நிலைக்கக் காரணமாகிவிட்டது.

    “மார்க்க முரணானவைகள் நடக்கக் காண்போர் இயன்றால் கரத்தால் தடுக்கட்டும். இல்லையென்றால் வாய்மொழியால் கண்டித்துத் திருத்தட்டும். அதுவும் முடியாதோர் மனத்தால் வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடை நிலை”.

                                              (முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ)

    சடங்கு சம்பிரதாயங்களுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், அனாச்சாரங்களுக்கும் இஸ்லாத்தில் இம்மியும் இடமில்லை; இஸ்லாமிய அங்கீகாரமுமில்லை. இருப்பினும் இன்றளவும் இவைகள் சமூக நியதியாகிவிட்டன. இதன் மூலம் இறைமார்க்கம் அனுமதித்தவைகள் விலக்கப்பட்டும், விலக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்பட்டும் வருகின்றன. இதற்கு உறுதுணையாயிருப்பவர்கள் ஆலிம்கள்!

    * “அவர்கள் தங்கள் பாதிரிகளையும், துறவிகளையும் மஸீஹிப்னு மர்யத்தையும் அல்லாஹ்வை விட்டு (விட்டு) தங்கள் ரப்புகளாக ஆக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இறைவனைத் தவிர வேறெவரையும் வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அவனின்றி வேறு இறைவனில்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன்”.                         (9:31)

    இந்த இறைவாக்கு இறங்கியபோது கிருஸ்தவறாக இருந்து இஸ்லாத்தைத் தழுவிய அதி இப்னு ஹாத்தம்(ரழி) என்ற நபித்தோழர் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே! (ரப்புகளாக்கி விட்டதாக இறைவன் கூறுகின்றானே…!) என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியதை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியதை ஹராம் என்றும் (ஆதாரம் இன்னதென்று ஆய்ந்தறியாமல் – கண்மூடித்தனமாய்) நீங்களும் நம்பினீர்கள். இல்லையா! (ஆம்) அது தான் அவர்களை ரப்புகளாக ஆக்கியது” என்று விளக்கம் தந்தார்கள்.                                    (அஹ்மத், திர்மிதீ)

     முன்னுள்ள சமுதாயத்தவர்கள் செய்த தவறுகள் இந்தச் சமுதாயத்தவராலும் தொடரக் கூடாதென்கிற எச்சரிக்கையே மேற்காணும் இறைவாக்க. அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அளித்த விளக்கம்: மார்க்கம் இவ்வளவு தெளிவாக எச்சரித்தப் பின்னரும் ஆலிம்களின் புரோகிதத்துக்கும், முஸ்லிம் பொதுமக்கள் இயன்றளவும் உறுதுணையாயிருப்பது வேதனைக்குறியதல்லவா? அது மட்டுமா……..? சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் புரோகிதத்தையும், புரோகிதர்களையும் முற்றாக அகற்றிடப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அந்நஜாத்தையும் முஸ்லிம் பொதுமக்கள் எதிர்த்துக் கொண்டிருப்பது அதைவிட வேதனைக்குரியது. என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! நன்றாக, அழகாக, ஒருமுறைக்குப் பன்முறை சிந்தியுங்கள் சிந்தியுங்கள்! புரோகிதம், புரோகிதர்கள் இவ்விரண்டில் கெடுதிகளை விட்டும் மீட்சிப்பெற முன்வாருங்கள். அப்போதுத் தான் இஸ்லாம் நிலைநாட்டிய பிரிவுகளற்ற ஆலிம் – அவாம் என்ற பேதமில்லாத, சமதர்ம, சமத்துவ, சகோரத்துவ, வாஞ்சை மிக்க சமுதாயத்தை நிறுவ முடியும்.

    மார்க்கம் காட்டித் தந்துள்ள செயல்கள் அனைத்தும் சாதாரணச் சாமான்யரும் செய்வதற்கேதுவாய் மிகவும் எளிதாகவே இருக்கிறது. அவைகளை செய்ய வேண்டிய முறைகளை அறியாமலிருப்பதால் முஸ்லிம் பொதுமக்களுக்கு அவை பளூவாகத் தெரிகின்றன. முஸ்லிம் பொதுமக்கள் அனைவரும் அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் பெயரால் இம்மை மறுமையில் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே குறிக்கோளாக்கி, மார்க்க ரீதியில் செய்ய வேண்டிய வகைகளை அறிந்துக் கொண்டால் புரோகிதர்களும், புரோகிதமும் முற்றாய் ஒழித்துவிடும். அப்போது முஸ்லிம் பொது மக்கள் மார்க்கம் கட்டளையிடும் செயல்கள் எளிமையாக இருப்பதை எளிதில் உணர்வர்.

    கூலிக்கு ஆள்ப் பிடித்துத் தான் – புரோகிதர்களைக் கொண்டு மட்டுமே செய்ய வேண்டிய நிர்ப்பந்தமுள்ளவைகள் அனைத்தும் மூடச்சடங்கு சம்பிரதாயங்களும், அனாச்சாரங்களுமேயாகும். அவைகள் மார்க்கத்திற்கு முரணானவைகள், அவைகளால் வயிறு வளர்ப்போர் மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுமாறு முஸ்லிம் பொதுமக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

    மார்க்கம் அனுமதித்த வணிகங்களில் ஈடுபடும்போது கூட மாறுந்தும் ஏமாற்ற அனுமதிக்கப்பட வில்லை.

மார்க்கத்தின் பெயரால்!

    மக்களை ஏமாற்றுவது, அதுவும் மார்க்க அறிஞர்களே ஏமாற்றினால், தட்டிக் கேட்க வேண்டியவர்களே தவறிழைத்தால், அதைத் தட்டிக் கேட்பது யார்? என்னரும் ஆலிம் பெருமக்களே! சிந்தியுங்கள் இஸ்லாத்திற்கு முன் எப்படியெல்லாமோ ஏமாற்றி வணிகம் செய்தனர். இஸ்லாத்தை ஏற்றப் பின் அந்த மக்களின் வணிக முறையில் மாறுதல் ஏற்ப்பட்டது. இது நல்லப் பொருள், இதற்கு இன்னவிலை, இது சிதைந்தப் பொருள், இதற்கு இன்ன விலை! என்று சஹாபா பெருமக்கள் வியாபாரம் செய்துக் காட்டியதுப் உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு சுடர் விட்டுக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நன்கறிந்துக் கொண்ட ஆலிம்களே! மார்க்கத்தின் பெயரால் மக்களை ஏமாற்றிப் பிழைப்பது எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்! தவ்பாச் செய்துக் மீளுங்கள்! (முன் வருவீர்களா! பொருத்திருந்து பார்ப்போம்.)

    மார்க்கத்தால் கண்டிப்பாய் வெறுத்தொதுக்கப்பட்ட இணைவைத்தல்களும், அனாச்சாரங்களும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களும், நன்மைப் புண்ணியம் என்று முஸ்லிம்(கள்) பொதுமக்கள் செய்துக் கொண்டிருப்பதற்குக் காரணம். ஆலிம்களாகிய நீங்களே அவைகளை முன்னின்று நடத்தி, அவைகளுக்கு மார்க்க ரீதியான அங்கீகாரம் வழங்கியதுத் தான். தயவுசெய்து ஆத்திரப்படாமல் சிந்தித்து மக்களுக்கு உண்மையான மார்க்கத்தை எடுத்துக் காட்டுவதுத் தான் அதற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் ஒரே வழி! குர்ஆன், ஹதீஸைக் கொண்டு மட்டுமே நிலைநாட்டப்பட்ட தீனுல் இஸ்லாத்தை நீங்களும் குர்ஆன், ஹதீதை கொண்டு மட்டுமே நிலைநாட்ட முன்வாருங்கள். அப்போது மார்க்கமல்லாத -மார்க்கமாய் எடுத்துக்காட்டப்பட்டவைகள் அனைத்தும் தானே கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துவிடும்.

    முஸ்லிம் பொதுமக்களே1 வேறொரு கோணத்தில் இப்போது சிந்திப்போம். ஆலிம்கள் பீடி, சிகரெட், சுருட்டு குடிப்பதையும் மற்றும் மூக்குப்பொடி போடுதல் போன்றவைகளையும் நாம் வெறுக்கிறோம்.

    ஒரு ஆலிம் விபச்சாரம் செய்தால் – வேரொரு ஆலிம் மது அருந்தினால் – மற்றொரு ஆலிம் லூத் நபி சமூகத்தார் செய்த இழி செயலில் ஈடுபட்டால் – இன்னொரு ஆலிம் சினிமாப் பார்த்தால் – வட்டி வாங்கினால் -லாட்டரி சீட்டு விற்பனை செய்தால் -இன்னும் நாம் தவறென்று உணர்ந்துள்ள எந்தத் தீயச் செயலில் ஈடுபட்டாலும் அவைகளெல்லாம் தவறு என்பதை எளிதாய் நாம் உணர்ந்து கொள்கிறோம். அதுப் போன்றவைகளில் ஈடுபட்ட ஆலிமை கடுமையாக விமர்சித்துக் கண்டிக்கின்றோம்; தண்டிக்கின்றோம். காரணம், மேற்கூறியவைகளைத் தவறு என்று நாம் உணர்ந்திருப்பது தான். சாதாரண சாமான்யர்களே இத்தவறுகளில் ஈடுபடுவதை வெறுப்பதால் அவர்களுக்கு மார்க்கம் கற்ப்பிப்போர் இத்தவறுகளில் ஈடுபடும் போது நம்மால் வாளாவிருக்க முடியவில்லை. வெகுண்டெழுகிறோம், செய்துவரும் பணியிலிருந்து நீக்கி விடுகிறோம். அந்த ஆலிமை வீட்டை விட்டே விரட்டி அடித்துவிடுகிறோம். அந்த ஆலிம் நம் பக்கத்து ஊருக்கு(க்கூட) வந்துவிடக்கூடாதென்று சுற்றுவட்டாரங்களிலுள்ள மதரஸாக்கள், மஸ்ஜித்கள், நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் அனைவரையும் தேடிக் கண்டுப்பிடித்து அவரைப் பணிக்கமர்த்த வேண்டாமென்று எச்சரிக்கின்றோம். இது சர்வசாதாரணமாய் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியாகும். ஆலிம்கள் செய்யும் தவறை தவறென்றுணர்ந்தால், அதைத் தடுத்து நிறுத்த முஸ்லிம் பொதுமக்கள் பெரும் பிரயத்தனம் செய்பவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    மே ’89 அந்நஜாத் இதழில் ஒரு ஆலிம் கொள்கை ரீதியில் செய்த மாபெரும் தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதைத் தவறென்று உணர்ந்த சில சகோதரர்களும் அந்நஜாத் அதைச் சுட்டிக்காட்டி விமர்சித்திருப்பதைக் கண்டு முகம் சுளித்தனர். அந்த ஆலிமுக்கு ஆதரவான சிலர் அவர்  இமாமாய்த் தொடர்ந்து பணிபுரிவதையே விரும்பினர். ஆனால் அவர் செய்தது மாபெரும் தவறு -அவர் இதற்கு மேலும் இமாமாய் நீடிக்கக் கூடாதென்று போர்க்கொடி தூக்கினார்கள் துணிவுமிக்க இளைஞர் சிலர், எனினும் ஆதரவாளர்கள் தக்க வைத்துக் கொள்ள பெரும் முயற்சிகள் செய்ததைத் தொடர்ந்து அந்த ஆலிமையும், அவர் ஆதரவாளர்களையும் கடுமையாகக் கண்டித்தும், கண்டனம் தெரிவித்தும், கடுமையாக விமர்சித்தும் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நிலமை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்து, தன்னை நீக்காமல் ஓயமாட்டார்கள் இந்த இளைஞர்கள் என்பதை நன்கு உணர்ந்து, மேற்க்கொண்டு விபரீதங்கள் நடக்கத் தானே காரணமாகிவிடக் கூடாதென்று அந்த ஆலிம் அவராகவே நீங்கிக் கொண்டார். இது ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் அவரது ஆதரவாளர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிரும் ஒரு கணிசமான தொகை வசூலித்துக் கொடுத்து அவர் சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்ததுத்தான் வேதனையளிக்கிறது.

    இதிலிருந்து கொள்கை ரீதியில் ஆலிம்கள் செய்துக் கொண்டிருக்கும் தவறுகளை முஸ்லிம் பொதுமக்கள் இன்னமும் முழுமையாக உணரவில்லை என்பதை அறிய முடிகிறது. இஸ்லாத்தின் மூலக்கொள்கையையும், அதற்குரிய ஆதாரங்களையும் முஸ்லிம் பொதுமக்கள் அறிய விழைவதின் மூலம் மட்டுமே இதனை நிவர்த்திக்க முடியும்.

    தடுத்து நிறுத்தப்பட வேண்டிய அனாச்சாரங்களும், மூடச் சடங்கு சம்பிரதாயங்களும், மூதாதையர் வழங்களும் தழைத்தோங்கி வளர்ந்து நின்று நிழைத்து விட்டன. இன்று அவைகள் தவறு என்று பட்டவர்த்தனமாய்த் தெரிகிறது. ஆனால் அவைகளைத் தடுத்து நிறுத்துவதோ, தடை செய்வதோ, முற்றாக ஒழிப்பதோ எளிதில் சாத்தியமாக்கக் கூடியதாக இல்லை. எடுத்துக் காட்டாக தர்ஹாக்கள்! “மண்ணறைகளின் மேல் கல்லறைகள் எழுப்புவது மார்க்க ரீதியில் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று!” என்பது இப்போதுத் தான் -மிகவும் காலங்கடந்துத் தான் முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் மு.பொ. மக்கள் இதைச் சரியாக உணராததால் எதிர்த்தார்கள். இறைவனின் தனிப் பெருந்தன்மையால் அயராதத் துணிவான ‘தவ்ஹீத்” பிரச்சாரம் தமிழகமெங்கும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதை கண்ணுற்ற மு. பொ. மக்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். மேலோட்டமாய் சிந்தித்தால் போதும். தர்ஹாக்களும், அங்கு நடப்பவைகளும் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானவைகள் இனங்கண்டுக் கொள்வதை சிந்தித்தால் இந்த தர்ஹாக்கள் அவைகள் பெயரால் தொடர்ந்து நடக்கும் அனாச்சாரங்களும் அட்டூழியங்களும் இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் அடித்தளத்தையும் தகர்த்தெறியக் கூடியவைகள் என்பதை அனுபவரீதியாக மு.பொ.ம உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். அதே நேரத்தில் ஆலிம்கள் பலர் இன்னமும் இதை உணராமல் தர்ஹாக்களை நியாயப்படுத்தி வீம்புப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மு.பொ. மக்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

Previous post:

Next post: