தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் அறிவு ஜீவிகள்!

in 2013 மே,தலையங்கம்

இன்றைய அறிவியல் உலகில் மேல்நாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கி இரண்டு கால் மனிதன் இரண்டு கால் மிருகமாக மாறி வருகிறான். இன்னும் நேரடியாகச் சொல்வதாக இருந்தால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலைக்கு இன்று மனிதன் ஆளாகியுள்ளான். இந்த உண்மையை இணை, துணை, இடைத்தரகர் இல்லா ஏகனான இறைவன் தனது இறுதி நெறிநூல் குர்ஆனின் அஃராஃப் : 7:175-179 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான்.

சுமார் 1450 வருடங்களுக்கு முன்னர் அன்றைய அஞ்ஞான காலத்தில் அரபு நாட்டு மக்கள் எப்படிப்பட்ட அராஜக, அட்டூழியங்களில் மூழ்கிக் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, வண்புணர்ச்சி, விபச்சாரம், கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, பால் மணம் மாறா சிறுமிகளை வன்புணர்ச்சியால் துவசம் செய்தல், போதையில் பெருமை பேசுதல், அற்பமான காரியங்களுக்கு காலங்காலமாக பகைமை பாராட்டிச் சண்டையிடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு அழிந்தது போல் இன்றைய அறிவியல் முன்னேற்றக் காலத்திலும் மக்கள் அத்தீய செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியதாகும்.

போதையில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மனித குலத்தைச் சீரழியச் செய்யும் சினிமாவிலும், கிரிக்கெட் ஆட்டத்திலும், அதன் மூலம் சூதாட்டத்திலும், பயனற்ற வெற்றுக் கேளிக்கை களிலும் மனித இனம் மூழ்கிக் கிடக்கிறது. ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், புலனாய்வுத் துறையினர், வக்கீல்கள், நீதிபதிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் துறைகளிலும் மிகமிகப் பெரும்பான்மையினர் ஐயறிவு மிருக வாழ்க்கை வாழ்கின்றனரே அல்லாமல் ஆறறிவு மனித வாழ்க்கை வாழ்வதாக இல்லை. சின்னத்திரை வெள்ளித்திரை என்ற சினிமாவின் ஆதிக்கம், மது ஆறாக நாட்டில் பெருக்கெடுத்து ஒடுவது சிறுவர், சிறுமிகளை பிஞ்சிலே பழுக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
மனித குல அதலபாதாள வீழ்ச்சிக்கு இரண்டு சாரார் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

ஒரு சாரார் கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் மதகுருமார்கள். மறுசாரார் இந்த மதகுருமார்களின் அடாத அட்டூழியச் செயல்களைப் பார்த்து, மனம் வெந்து அவர்கள் போதிக்கும் கடவுள் நம்பிக்கையையும், மறுமை விசாரணையையும் மறுக்கும் நாத்திகர்கள்; இந்த இரண்டு சாராருமே மனிதன் மிருகமாக மாறுவதற்கு முழுமுதல் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். மனிதனின் இவ்வுல வாழ்க்கை தற்காலிக வாழ்க்கை; சோதனை-பரீட்சை வாழ்க்கை. இச் சோதனையில் அதாவது பரீட்சையில் வெற்றி பெறுகிறவர்கள் மட்டுமே மறுமையில் நிரந்தர வாழ்க்கையில் சுகங்களை அனுபவிப்பார்கள். தோல்வியுறுபவர்கள் மறுமையில் நரகில் நிரந்தரமாக வேதனை அனுபவிப்பார்கள் என்று அனைத்தையும் படைத்த இறைவன் தனது இறுதி வாழ்க்கை நெறிநூலில் தெளிவாகக் கூறி இருக்கிறான். (பார்க்க: 67:2, 2:38,39, 33:66-68, 18:102-106)

2:186 இறைவாக்கில் தன்னையே முற்றிலும் நம்பும்படியும், தன்னிடமே கேட்கும்படியும், அதாவது தனது வழிகாட்டல்படி மட்டுமே நடக்க இறைவன் கட்டளையிடுகிறான். 7:3ல் தன்னால் இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்றும்படியும், மனிதர்களில் யாரையும் நம்பி அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று நேரடியாகக் கட்டளையிட்டுள்ளான். 52:2,3 இறைக் கட்டளைகளில் தனது தூதரும் தன்னால் இறக்கப்பட்டதை மட்டுமே போதிக்கி றார் என்பதையும் இறைவன் உறுதிப்படுத்துகிறான்.

இந்த நிலையில் மனித வாழ்க்கையில் இறைவ னுக்கும் மனிதனுக்குமிடையில் இடைத்தரகர்களாகப் புகுவதற்கு மதகுருமார்களுக்கு எங்கே அனுமதி இருக்கிறது? இறைவனை மறுத்து தங்களின் சுயக் கருத்துக்களைக் கூறுவதற்கு நாத்திகர்களுக்கு எங்கே அனுமதி இருக்கிறது? மனிதக் கருத்து என்று வரும்போது ஆத்திகர்களான மதகுருமார்களும் ஒத்தக் கருத்தில் இருக்கமாட்டார்கள். நாத்திகர்களும் ஒத்தக் கருத்தில் இருக்கமாட்டார்கள். ஆளாளுக்கு அவர்கள் மனதில் அவர்களின் மனோ இச்சை அதாவது ஷைத்தான் போடுவதைத்தான் நேரான வழி என்று சாதிப்பார்கள். அதுவும் அவர்கள் சார்ந்திருக்கும் மதம், இஸம், கொள்கை அடிப்படையிலேயே இருக்கும்.

எனவே மனிதகுல ஒற்றுமை மனிதர்களின் சுய கருத்துக்களால் ஒருபோதும் ஏற்படாது. மதகுருமார்களின் கருத்துக்களையும், இஸங்களின், நாத்திகர்களின் கருத்துக்களையும் புறக்கணித்துவிட்டு மனிதனைப் படைத்த இறைவனின் வழிகாட்டல் நூல் குர்ஆன் கூறும் கருத்துக்களை மனித குலத்தினர், குறிப்பாக குர்ஆனை இறைவன் இறக்கியருளியது என்று உறுதியாக நம்பும் முஸ்லிம்களாவது 3:103 இறைக் கட்டளை நேரடியாகச் சொல்வது போல் பற்றிப் பிடித்தால் மட்டுமே ஒற்றுமைக்கு வழி ஏற்படும். மனித வாழ்க்கையில் சபீட்சம் மலரும்.

உதாரணமாக இன்று இந்தியாவையே ஆட்டிப் படைக்கும் பருவம் அடையாச் சிறுமிகளிடமும் வன் புணர்ச்சியில் ஈடுபடும் துன்மார்க்கர்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் விஷயத்தில் எப்படிப்பட்ட மாறுபட்ட மனிதக் கருத்துக்களைப் பார்க்கிறோம். கொலையாளிக்குக் கூட மரண தண்டனை கொடுக்கக்கூடாது என்பவர்களும் இந்த துன்மார்க்கர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூப்பாடு போடுகின்றனர். இந்த விஷயத்தில் கூட மக்களிடையே மாறுபட்டக் கருத்துக்களைப் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மனிதர்களிடையே மாறுபட்டக் கருத்துக்கள் ஏற்படுவது மனித இயல்பு.
அதிகமான மக்களின் கருத்து எதுவோ அதன்படி செயல்படுவதுதான் சரி என்ற ஜனநாயக சிந்தனை யும் வழிகேடு; அவர்கள் வெறும் யூகங்களையும், கற்பனைகளையும் கொண்டு நேரான வழியை கோணல் வழிகளாக ஆக்கிவிடுவார்கள் என்று இறைவன் குர்ஆனின் 6:116 இறைவாக்கில் எச்சரிக்கிறான். அப்படியானால் மனித குலம், அவர்களைப் படைத்துச் சோதனைக்காக இவ்வுலகில் வாழவிட்டிருக்கும் இறைவனின் கட்டளைகளான குர்ஆனின் வழிகாட்டல்படி நடப்பதால் மட்டுமே மனிதகுல ஒற்றுமை ஏற்படும்.

இன்று நேற்றல்ல; ஆதிகாலம் தொட்டு சகல தீமைகளுக்கும் ஆணிவேர் மனித அறிவை மயக்கி அவனை மிருகமாக்குவது போதை தரும் மதுபானங் களே. நேர்மையான மனசாட்சியுள்ளவனும் குடித் துப் போதை தலைக்கேறிவிட்டால் கொலை, கற்பழிப்பு, திருடு என சகல பாவங்களையும் செய்யத் துணிந்து விடுவான். இது பற்றிய ஒரு கதையே உண்டு.

ஒரு நடுத்தர மனிதனிடம் ஒரு பெண்ணுடன் இணைந்து அவளது கற்பை சூரையாடு என்று சொல் லப்பட்டது; அவன் மறுத்துவிட்டான். ஒரு சிறுவனைக் காட்டி அவனைக் கொலை செய் என்று சொல்லப்பட்டது; அதற்கும் மறுத்துவிட்டான். அடுத்து ஒரு கிளாஸ் மதுவைக் கொடுத்துக் குடி என்று சொல்லப்பட்டது. இதில் என்ன தவறு ஏற்படப் போகிறது என்று எண்ணி அதை வாங்கிக் குடித்து விட்டான். விளைவு போதை தலைக்கேறி காமவெறி முற்றி அப்பெண்ணை கற்பழிக்க முற்பட்டான். வெறியில் அதைத் தடுத்த சிறுவனையும் கொலை செய்துவிட்டு அப்பெண்ணைக் கற்பழித்து விட்டுக் கொலையும் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டான் என்பதே அக்கதை.

இப்போது சிந்தியுங்கள். மதுவை விட கெடுதி இப்பாரினில் உண்டா? இதோ படைத்த இறைவனே கூறுகிறான். மது, சூதாட்டம் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்(தூதரே!) கூறும். அவ்விரண்டிலும் பெரும் தீங்கும், மனிதர்களுக்கு (சிறிது) பலன்களும் உள்ளன. அவ்விரண்டிலுள்ள பலனை விட தீங்கு அதிகம். (2:219) (மேலும் பார்க்க: 5:90,91) அரசே டாஸ்மாக் கடைகள் நடத்தி நாட்டில் மது ஆறாக ஓட வைத்திருக்கிறது. இன்று நாட்டில் நடக் கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை இன்னும் இவை போல் பஞ்சமா பாவங்கள், சாலை விபத்துகள் அனைத்துக்கும் குடிப்பழக்கமும், சினிமா காமக் காட்சிகளுமே முழுக் காரணமாக இருக்கின்றன.

இன்று மதுப்பழக்கமில்லாத மந்திரிகளோ, எம்.பி.க்களோ, எம்.எல்.ஏக்களோ, எம்.சி.க்களோ இருந்தால் அது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். காவல் துறையினரே போதையில்தான் மிதக்கின்றனர். இந்த நிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழியுமா? சீர்படுமா? சொல்லுங்கள். நாட்டையும், நாட்டு மக்களையும் கெடுத்துக் குட்டி சுவராக்கும் இம்மதுவையும், காமக் காட்சிகள் நிறைந்த சினிமாவையும் நாட்டை விட்டே துரத்த அரசுகள் முன்வருகின்றனவா? இல்லையே! காரணம் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இன்று மக்கள் உணர்ச்சிவசப்பட்டு எங்கும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடக் கார ணமான சிறுமிகளை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொடுமைப் படுத்துவதை எடுத்துக் கொள்ளுங்கள். பருவ மங்கைகளின் அரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம் இவற்றைப் பார்த்து ஆண்கள் காமக் கிளர்ச்சி அடைகிறார்கள் என்றால் அதில் பொருள் இருக்கிறது. ஆனால் பால்மணம் மாறாத சிறுமிகளைப் பார்த்து காமக் கிளச்சி ஏற்படுமா? ஏற்படுகிறதே என்ன காரணம்? அப்படி ஈடுபடுகிறவர் களைப் பிடித்துப் பரிசோதித்துப் பாருங்கள். முழு போதையிலேயே இருப்பார்கள். போதையில் மதி மயங்கியே அந்த ஈனச் செயலில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் மக்களைப் போதையில் தடுமாறச் செய்யும் மதுவையும் லஞ்சத்தையும் நாட்டை விட்டு அப்புறப்படுத்தி நாட்டையும், மக்களையும், சுத்தப்படுத்துவதை விட்டு, அதைக் கண்டு கொள்ளாமல், இவர்களும் போதைக்கும் லஞ்சத்திற்கும் அடிமையாக இருந்து கொண்டு, சிறுமிகளிடம் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறவர்களுக்கு இப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், அப்படித் தண்டனை கொடுக்க வேண்டும், மரணத் தண்டனை அளிக்க வேண்டும் என்றெல்லாம் பிதற்றுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் ஈனச் செயலே. ஆயினும் ஜனநாயக ஆட்சி முறையில் இப்படியெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத கருத்துக்களைச் சொல்லி மக்களின் வாக்குச் சீட்டில் குறி வைப்பது அரசியல் வியாபாரிகளின் வாடிக்கை!

Previous post:

Next post: